தமிழைப் போற்றி வளர்க்க மத்திய அரசு முன்னிற்கும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.
புதிய கல்விக் கொள்கை குறித்து மத்திய அரசுக்கு கஸ்தூரிரங்கன் குழு ஒரு வரைவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில், புதிய கல்விக் கொள்கை குறித்து சில அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
அதில் இடம்பெற்ற மும்மொழிக் கொள்கையின்படி, மாநிலத்தில் வழங்கப் படும் தாய்மொழி, இணைப்பு மொழி, இந்தியாவின் வேறு ஏதாவது ஒரு மொழி என மூன்று மொழிகளைப் பயிற்றுவிக்கும் வகையில் பரிந்துரை செய்யப் பட்டுள்ளது.
சொல்லப் போனால் இது கடந்த ஆட்சியில் பிரதமர் மோடி சில கூட்டங்களில் கூறி வந்தது தான். தேசிய சிந்தனைகள் மலர வேண்டும் என்றால், நம் அண்டை மாநிலத்தின் மொழி, கலாசாரம் ஆகியவற்றை மாணவர்கள் இளமைப் பருவத்தில் இருந்தே பயில வேண்டும் என்று கூட்டங்களில் கூறி வந்தார்.
ஆனால், தமிழகத்தில் முன்னர் மும்மொழிக் கொள்கை என ஹிந்தி ஓர் இணைப்பு மொழியாக முன்னிறுத்தப் பட்டது. அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்து போராட்டங்கள் நடைபெற்றதால், அதை கடந்த அரை நூற்றாண்டுக்கு முன்பே அரசு நடைமுறைப் படுத்தவில்லை.
இந்நிலையில் மூன்றாவது மொழி என ஹிந்தியுடன் சேர்த்து வேறு மாநில மொழி ஏதேனும் பயிலும் திட்டத்தைத்தான் கஸ்தூரி ரங்கன் குழு முன்வைத்துள்ளது. ஆனால் அதை ஹிந்தி கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவு போட்டுள்ளதாக திமுக., சார்பு ஊடகங்களால் இது சர்ச்சை ஆக்கப் பட்டது.
முன்னதாக, கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரை இணையதளத்தில் வெளியிடப்பட்டு, பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்படுகின்றன. ஆனால் எவருமே அந்த பரிந்துரைகளை முழுவதுமாக படிக்கவில்லை என்றும், ஹிந்தி கட்டாயம் என்று எங்கே குறிப்பிடப் பட்டுள்ளது என்பதை ஊடகங்கள் விளக்குமா என்றும் சமூக வலைத்தளத்தில் கருத்துகள் முன்வைக்கப் படுகின்றன.
இந்நிலையில், தமிழை வளர்ப்பதற்கு மத்திய அரசு முன்னின்று ஆதரிக்கும் என்று கூறியுள்ளார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
அவர் தனது டிவிட்டர் பதிவில்…
மக்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்பே கல்வி குழுவின் வரைவு அறிக்கை அமல்படுத்தப்படும். பிரதமர் அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்க விரும்பியே “ஒரே பாரதம் உன்னத பாரதம்” “#EkBharatSreshthaBharat முயற்சியை துவக்கினார். தொன்மையான தமிழை போற்றி வளர்பதற்கு மத்ய அரசு முன்னின்று ஆதரிக்கும்.
– என்று கூறியுள்ளார்.
அதன்படி, தமிழகம் அல்லாத மற்ற மாநில மாணவர்கள் மூன்றாவது மொழியாக தமிழைக்கூட படிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத் தக்கது.
மக்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்பே கல்வி குழுவின் வரைவு அறிக்கை அமல்படுத்தப்படும். பிரதமர் அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்க விரும்பியே “ஒரே பாரதம் உன்னத பாரதம்” “#EkBharatSreshthaBharat முயற்சியை துவக்கினார். தொன்மையான தமிழை போற்றி வளர்பதற்கு மத்ய அரசு முன்னின்று ஆதரிக்கும்.
— Nirmala Sitharaman (@nsitharaman) June 2, 2019