ஹாங்காங்கில் ஏற்பட்டுள்ள கலவரத்தைக் கட்டுப்படுத்த சிறப்புப் பயிற்சி பெற்ற 10 ஆயிரம் பேர் கொண்ட துணை ராணுவப் படையை களமிறக்க சீனா முடிவு செய்துள்ளது.
ஹாங்காங்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சீனாவிற்கு அழைத்துச் சென்று விசாரிக்கும் முறைக்கு எதிராக கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து கடந்த ஒரு மாத காலத்திற்கும் அதிகமாக அங்கு வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில் ஹாங்காங் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு 10 ஆயிரம் பேர் அடங்கிய துணை ராணுவப்படையை ஹாங்காங் எல்லைப் பகுதியான ஷென்ஷன் (Shenzhen) என்ற இடத்தில் நிறுத்தியுள்ளது. இந்நிலையில் கலவரத் தடுப்பு ஒத்திகையில் துணை ராணுவப் படையினர் ஈடுபடும் வீடியோவையும் சீனா வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், டிவிட்டர் திங்களன்று “சீன அரசு கட்டுப்பாட்டில் உள்ள செய்தி ஊடக நிறுவனங்களின்” விளம்பரங்களை இனி ஏற்கப்போவதில்லை என்று அறிவித்தது!
பேஸ்புக்கோடு சேர்ந்து, டிவிட்டரும் சீனாவிலிருந்து நடத்தப்படும் ரகசிய அரசு ஆதரவு சமூக ஊடக பிரச்சாரத்தை அறிந்து கொண்டு, அவற்றை நீக்குவதாகக் கூறியுள்ளது. ஹாங்காங்கில் நடந்துகொண்டிருக்கும் ஆர்ப்பாட்டங்களை இழித்துப் பேசி அவற்றை தவறாக சித்திரிக்க முயன்றதாக இரு சமூக ஊடகங்களும் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
“ஆரோக்கியமான கருத்துரையாடல் மற்றும் வெளிப்படையான உரையாடலை நாங்கள் பாதுகாக்க விரும்புகிறோம்” என்று ட்விட்டர் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டிவிட்டரின் புதிய கொள்கைப்படி, “விளம்பர ரீதியாக அணுகும் அல்லது அரசு சார் கருத்துக்களால் இயங்கும், அரசால் கட்டுப்படுத்தப்படும் செய்தி ஊடக நிறுவனங்களுக்கு” மட்டுமே இந்த விளம்பர கருத்துகள் ஏற்கப் படாதது பொருந்தும் என்று நிறுவனம் கூறியுள்ளது. ஃப்ரீலான்ஸர்கள், பொது ஊடகங்கள் உட்பட வரி செலுத்துவோர் விளம்பர நிதியளிக்கும் நிறுவனங்கள் இந்தப் புதிய விதியில் இல்லை என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது.
ட்விட்டர் தனது அறிக்கையில் எந்த சீன நிறுவனத்தின் பெயரையும் வெளியிடவில்லை. ஆனால் 900 க்கும் மேற்பட்ட அரசு சார் கணக்குகளை அடையாளம் கண்டுள்ளது.
டிவிட்டர் இது குறித்து கூறுகையில், “வேண்டுமென்றே குறிப்பாக ஹாங்காங்கில் அரசியல் முரண்பாடுகளை விதைக்க சீன அரசு முயல்கிறது, இதில் எதிர்ப்பு இயக்கத்தின் நியாயத் தன்மையையும் அரசியல் நிலைகளையும் குறை மதிப்பிற்கு உட்படுத்துகிறது.”
அரசு சார்பில் இயங்கும் சில டிவிட்டர் கணக்குகள், ஹாங்காங் எதிர்ப்பாளர்களை “கரப்பான் பூச்சிகள்” என்று குறிப்பிடுகின்றன! அவர்களை ஐஎஸ்ஐஎஸ்., பயங்கரவாதிகளாக சித்திரித்துள்ளன. இவ்வாறு ஹாங்காங் போராட்டக்காரர்களைப் புண்படுத்தும் கணக்குகள் அனைத்தும் ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கிலிருந்து அகற்றப்பட்டுள்ளன.