புகழேந்தி பேசியதை திட்டமிட்டு யாரும் வீடியோ எடுத்து வெளியிடவில்லை; எல்லாவற்றையும் நான் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன், விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.. என்று கூறியுள்ளார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.
அமமுகவில் இருந்து பலர் தொடர்ந்து வெளியேறி வருவதாகக் கூறப்படும் நிலையில், கோவையில் தனியார் ஹோட்டல் அறையில் அமமுக.,வினரோடு அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி பேசிய வீடியோ வெளியாகி, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவில், “போகும் அல்லது இருக்கும் இடத்தில் முகாந்திரம் இருக்க வேண்டும். இங்கு யாருடனும் இருக்கும் விருப்பம் எனக்கு இல்லை. டிடிவியை ஊர் ஊராகச் சென்று நான்தான் அடையாளப் படுத்தினேன். ஆனால் ஜெயலலிதா மரணத்தில்கூட அவர் உடன் இல்லை. இதனால் விரைவில் ஒரு நல்ல முடிவு எடுப்பேன்” என்று அவர் பேசியது போல் வீடியோவில் காட்சிகள் உள்ளன.
எனவே, டிடிவி தினகரனுடன் புகழேந்தி அதிருப்தியில் இருக்கிறார் என்றும், விரைவில் அமமுகவில் இருந்து அவர் வெளியேறப்போகிறார் என்றும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் தன்னை அசிங்கப் படுத்தவே அமமுக ஐ.டி. பிரிவு அவ்வாறு வீடியோ வெளியிட்டிருப்பதாக புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
கட்சியில் பல்வேறு பிரச்னைகளைச் சொல்லி தன்னிடம் விரக்தியில் முறையிட்டவர்களுடன் தாம் பேசியதாகவும், அதிருப்தியில் இருந்தவர்களை சமாதானப்படுத்தவே அவ்வாறு தான் பேசியதாகவும் புகழேந்தி கூறியுள்ளார்.
மேலும், அது தனிப்பட்ட வகையில், நான்கு சுவர்களுக்குள் பேசப்பட்ட ஒரு விஷயம். அதுவும் கட்சியினரை சமாதானப் படுத்த அவ்வாறு பேச வேண்டியிருந்தது. ஆனால் அதை திருட்டுத் தனமாக வீடியோவாக எடுத்து, அதனை வெளியிட்டவர்கள் யார் என்று குமுறுகிறார் புகழேந்தி.
இந்தப் பேச்சு தொடர்பில், முழு வீடியோவை வெளியிட வேண்டும், அதனைப் பார்த்தால் முழுமையாக புரியும் எனக் கூறினார் புகழேந்தி.
இருப்பினும், தனக்கு அதிருப்தி இருப்பதாக வைத்துக் கொண்டாலும் தான் கட்சித் தலைமையிடம்தான் பேசியிருப்பேன் என்று கூறிய புகழேந்தி, இது மிகவும் மோசமான செயல் என்றும், அமமுக., ஐடி பிரிவுதான் இவ்வாறு செய்திருப்பதாகவும் கூறியுள்ளார். அவர்களின் உள்நோக்கம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார் புகழேந்தி.
இதனிடையே, அவருக்கு உடன் இருந்து டிடிவி.,க்கு அரசியல் பின்புலனாக இருந்து வரும் (டிடிவி.,யால் பதவி இழந்த எம்.எல்.ஏ.,) வெற்றிவேல், புகழேந்தி பேசுவதைப் பார்த்தால் அவர் வேறுகட்சிக்கு செல்வதைப் போல் உள்ளது. வீடியோவை அமமுக ஐ.டி. பிரிவு வெளியிட்டதாக புகழேந்தி கூறுவது தவறு என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், கட்சிக்குள் நிலவும் பூசல்களை தாம் பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார் அமமுக., பொதுச் செயலர் டிடிவி தினகரன் எம்.எல்.ஏ.,!