பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் குலாலாய் இஸ்மாயில் (32). இவர் தனது சிறுவயது முதல் பாகிஸ்தானில் நடைபெற்று வரும் குழந்தைகள் திருமணம், பெண் ஆணவக் கொலைகள் போன்ற சமூக பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தார்.
கைபர் பக்துன்வா, பலூசிஸ்தான் மாகாணம் உள்ளிட்ட சில பகுதிகளில் பழங்குடி இனத்தவர்களான பஷ்தூன் இன பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டுவரும் கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகைப்படங்களை ஆதாரத்துடன் சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
இதனால், குலாலாய் இஸ்மாயில் மீது நாட்டுக்கு எதிராக செயல்பட்டதாக தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்வதைபோலீசார் தீவிரப்படுத்தினர்.
இதனால், தலைமறைவாக வாழ்ந்து வந்த குலாலாய் இஸ்மாயில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவியுடன் பாகிஸ்தானில் இருந்து தப்பிச்சென்று அமெரிக்காவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஐ.நா. சபை வளாகத்துக்கு வெளியே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெண் சமூக ஆர்வலர் குலாலாய் இஸ்மாயில் பங்கேற்று பாகிஸ்தானுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
பாகிஸ்தான் ராணுவம் அரசியலில் தலையிடுவதை நிறுத்தவேண்டும்’ என்று முழக்கங்கள் எழுப்பினார். “பயங்கரவாதத்தை ஒழிக்கிறோம் என்ற பெயரில், அப்பாவி பஷ்தூன் சிந்து பலூஸ் இன மக்கள் கொல்லபடுகின்றனர்.
பாகிஸ்தான் ராணுவத்தின் சித்ரவதை மையங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் அடைக்கப்பட்டு துன்புறுத்தபடுகின்றனர். பாகிஸ்தான் ராணுவம் உடனடியாக மனித உரிமை மீறல்களை நிறுத்தவேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற குலாலாய் இஸ்மாயில் தெரிவித்தார்.
சித்ரவதை சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் மக்களை விடுவிக்கவேண்டும். அரசுக்கு எதிராக நாங்கள் குரல் எழுப்பினால் எங்களையும் தீவிரவாதிகள் என முத்திரை குத்திவிடுகின்றனர். பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் சர்வாதிகாரம் நடக்கிறது.
பாகிஸ்தான் அரசு அதிகாரத்தை எனக்கு எதிராக பயன்படுத்தி, என் குரலை நசுக்க பார்த்தது. என்னை சித்ரவதை செய்தும், என்குடும்பத்துக்கு அழுத்தம் கொடுத்தனர். இருப்பினும் என் முழுக்குடும்பமும் எனக்கு ஆதரவாகவே நின்றது. என் தந்தை மற்றும் தாயின்மீது போலிக்குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்” என்று ஆர்பாட்டத்தின்போது அவர் தெரிவித்தார்.