குடும்பம் நடத்துவதற்கு கூட ‘ஜெ டாக்ஸ்’ கட்ட வேண்டி வரலாம்…! ஜெகன் அரசாங்கத்தின் மீது சந்திரபாபு நாயுடு கடுமையான விமர்சனம்.
வேலை உத்தரவாத நிதி 2500 கோடி ரூபாய்களை விடுவிக்காமல் ஜெகன் அரசு வேண்டுமென்றே தாமதம் செய்கிறது என்று தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு விமர்சித்தார்.
மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ள போதிலும் மாநில அரசாங்கம் வேண்டும் என்றே தடை விதிக்கிறது என்று குற்றம் சாட்டினார் .
திருட்டு கணக்கு எழுதுவதில் தேர்ந்தவரான சிஎம் ஜெகன் இப்போது வசமாக மாட்டிக் கொண்டார் என்று கடுமையாக விமர்சித்தார்.
குண்டூர் தெலுகு தேசம் கட்சி அலுவலகத்தில் முன்னாள் கிராம பஞ்சாயத்து, மண்டல் பரிஷத், ஜில்லா பரிஷத் தலைவர்களுடன் சந்திரபாபு நாயுடு கலந்துரையாடினார்.
கிராமங்களில் வேலை உத்தரவாத கூலிப்பணம் வராமல் தொழிலாளர்கள் தொல்லைக்கு ஆளாகிறார்கள் என்று சந்திரபாபுவின் கவனத்திற்கு அவர்கள் கொண்டு வந்தார்கள்.
தெலுகு தேசம் கட்சி ஆட்சியில் ஆரம்பித்த வேலை உத்தரவாத திட்டத்தின் மேல் வந்த குற்றச்சாட்டுகளை அவர்களால் நிரூபிக்க முடியவில்லை என்று சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டார்.
ஆந்திர முதலமைச்சர் ஜகனின் சொந்த தொகுதி புலிவெந்தல, பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திராரெட்டியின் தொகுதி சித்தூர் ஜில்லா புங்கனூரு தவிர வேலை உத்தரவாத நிதியை வேறு எங்குமே விடுவிக்கவில்லை என்று சந்திரபாபு ஆத்திரமடைந்தார்.
தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை. எதிரிக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என்பதே ஜெகனின் சுபாவம் என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
அவருடைய சொந்தக் கட்சித் தலைவர்கள் கூட தொல்லைக்கு ஆளாகிறார்கள் என்றும், ஜெகன் தாம் ஒருவர் தவிர வேறு எவரும் சுகப்படக் கூடாது என்ற இயல்பு உடையவர் என்றும் சந்திரபாபு குற்றம் சாட்டினார்.
யாரேனும் தன் சொந்த வயலில் மண் எடுக்க வேண்டும் என்றாலும் “ஜெகன்மோகன் ரெட்டி வரி” (ஜெ டாக்ஸ்) வசூல் செய்கிறார் என்று எரிந்து விழுந்தார்.
நாளை கணவன் மனைவி குடும்பம் நடத்துவதற்கு கூட “ஜெ டாக்ஸ்”வசூல் செய்வார் போல் உள்ளது என்று நையாண்டி செய்தார்.
டிடிபி தலைவர்களின் பொருளாதார ஆதாரங்களை அழித்து விடவேண்டும் என்று வேண்டுமென்றே இவ்வாறு செய்கிறார் என்று குற்றம் சாட்டினார்.
வயல்களில் கூலி வேலை செய்பவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் நேராக கூலிகளுக்கு கொடுக்க வேண்டும் என்றார். மத்திய அரசு அனுப்பிய விவசாய நலத்திட்ட நிதிகளைத் தடுப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்றார்.
உடனே பில்களை செலுத்த வேண்டும் என்று சந்திரபாபு டிமாண்ட் செய்தார். ஒருவேளை இந்த அரசு இறங்கி வராவிட்டால் இம்முறை தன் அரசே வரும் என்றும்… பில்களை வட்டியோடு கூட செலுத்துவோம் என்றும் நம்பிக்கை அளித்தார்.