திமுகவிற்கு தோல்வி பயம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் புறநகரில் அதிமுக அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்தினார்.பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:
தேர்தலை அறிவித்த பிறகு மக்களை சந்திப்பதுதான் ஜனநாயகம். தேர்தலை எதிர்கொள்ள பயந்துவிட்டு ஏதேதோ செய்கிறார்கள். உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தும். நீதிமன்ற உத்தரவு வந்துள்ளது. கூட்டணி கட்சிகளுடன் பேச உள்ளோம். விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உள்ளோம்.
தேர்தல் தோல்வி பயத்தில் திமுக செயல்பட்டு வருகிறது. கடந்த 2016 ல் நீதிமன்றத்தில் தடை வாங்கியது. தற்போதும் தடை வாங்க முயற்சி செய்தனர். ஆனால், அதற்கு நீதிமன்றம் மறுத்துவிட்டது. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது.. என்று கூறினார்.
இதனிடையே, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் கூறிய போது…
உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சி என திட்டமிட்டு பிரச்சாரம் நடத்தப் படுகிறது. ஜனநாயகத்தைக் காக்கும் வகையில் தீர்ப்பு உள்ளது. தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று முறையாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். தொகுதி வரையறை சரியாக இல்லை என்ற காரணத்திற்காக தான், திமுக நீதிமன்றத்தை நாடியது. தேர்தலை நிறுத்துவதற்கு இல்லை… என்று உள்ளாட்சித் தேர்தல் உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து ஸ்டாலின் கருத்து தெரிவித்தார்.