சுகாதாரக் கேடுகள் நிரம்பிய குற்றாலம் தேர்வீதிகளில் மார்கழித் தேரோட்டம்.குற்றாலம் கோவில் நிர்வாகம் மீது இந்து அறநிலையத்துறை நடவடிக்கைகள் எடுக்குமா…
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதர் கோயில் மார்கழி மாத ஆருத்ரா தரிசனத் திருவிழாவை முன்னிட்டு திருக்குற்றாலநாதர் திருத்தேர் உலா இன்று காலை நடைபெற்றது. சிவனடியார்கள் வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நகரின் முக்கிய ரத வீதிகளின் வழியாக தேர் வலம் வந்தது.
தேர் வலம் வரும் ரத வீதியில், அங்குள்ள தனியார் விடுதிகளின் கழிவு நீர் சாலை வழியாக வழிந்தோடியது. குறிப்பாக வேற்று மதத்தவர்களும் அசைவ உணவு சமைப்பவர்களும் அந்தப் பகுதியில் நெடுங்காலமாகவே இது போன்ற அராஜகங்களில் ஈடுபட்டு வருவதாக, பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றன.
கழிவுகளின் குவியலால், தேரோட்டப் பகுதியில் துர்நாற்றம் வீசியது. தேரோட்டம் நடைபெறும் நேரத்தில், பக்தர்கள் கால் வைத்து தேரை இழுத்துச் செல்லும் நேரத்தில், இறைவன் தேர் ரத வீதியில் வரும் சூழலில், அந்தப் பகுதியை தூய்மையாக்க வேண்டும் என்ற உணர்வும் கடமையும் கூட இல்லாத அறநிலையத்துறையை பக்தர்கள் திட்டித் தீர்த்தும் சபித்தும் தங்கள் கோபத்தைத் தீர்த்துக் கொண்டனர்.
தனியார் தங்கும் விடுதிகளின் சாக்கடைக் கழிவுகள், குளியலறை டாய்லட் கழிவுகள் ரதவீதியில் வழிந்தோடுகின்றனர். அங்கே உள்ள மட்டன் ஸ்டால்களில் இருந்து வெளியே வீசப் படும் இறைச்சிக் கழிவுகள், இறைச்சியைக் கழுவும் கழிவு நீர் ஆகியவை கோயில் தெப்பக் குளத்தில் போடப் படுவது குறித்து பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
வருடம் தோறும் செய்தியாளர்கள் இந்த அவல நிலையைக் கண்டு படம்பிடித்து செய்திகளைப் பதிவு செய்தாலும், அதிகாரிகள் அவற்றுக் கெல்லாம் தலை அசைப்பதில்லை. எனவே, மட்டன் ஸ்டால்களில் இருந்தும், அங்குள்ள கடைகளில் இருந்தும் முறைகேடாக பணம் பெற்றுக் கொண்டு, பக்தர்களின் கோரிக்கைகளை அலட்சியப் படுத்துவதாக, பலரும் முணுமுணுத்தபடி சென்றனர்.