கரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைக்காக சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் புறநகர்ப் பகுதியில் தனி வார்டுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘கரோனா வைரஸ் குறித்த வீண் வதந்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம். இந்த வைரஸ் பற்றி சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,
கரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் தனிவார்டில் வைத்து கண்காணிக்கப்படுவர். இதற்காக சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் புறநகர்ப் பகுதிகளில் தனி வார்டுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் போதுமான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் கூடுதல் மருத்துவ உபகாரணங்கள் வாங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
மேலும், மக்களிடையே கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த யோகிபாபு நடிப்பில் குறும்படம் ஒன்று வெளியிடப்படுகிறது. இன்று மாலை அது வெளியாகும்’ என்று தெரிவித்துள்ளார்.