― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்பல்வகை சிறப்புக்கள் கொண்ட பங்குனி உத்திரம்!

பல்வகை சிறப்புக்கள் கொண்ட பங்குனி உத்திரம்!

- Advertisement -

பால் குணம் என்ற சொல்லே பங்குனி என்று சொல்லப்படுகிறது இந்த மாதத்தில் சூரிய பகவான் மீன ராசிக்கு வருகிறார் இங்கு வந்ததும் சூரியனுடைய சக்தி அதிகமாகிறது இந்த மாதத்தை பீடை மாதம் என்று சொல்வார்கள் இந்த மாதம் உத்திர நட்சத்திரத்தன்று விரதம் இருப்பார்கள் இதை கல்யாணசுந்தர விரதம் என்பார்கள்

அம்மையப்பனின் இணைவாக பங்குனி மாதம் சிறப்புப் பெறுவதால் சைவ, வைணவ பேதமின்றி அனைத்து ஆலயங்களிலும் தெய்வத் திருமணங்கள் இந்த மாதத்தில் நடைபெறுகின்றன.

தெய்வ திருமணங்கள் பலவும் நடந்தேறிய மாதம் பங்குனி மாதம். பார்வதி – பரமேஸ்வரன், ஆண்டாள் – ஸ்ரீரங்கநாதர், தெய்வானை – முருகன் என தெய்வத் திருமணங்கள் அனைத்தும் பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளில் நடந்ததாக புராணங்கள் கூறுகின்றன. காமாட்சி அன்னை ஊசி முனையில் தவம் இருந்து ஏகாம்பரேஸ்வரரோடு ஐக்கியமானதும் இந்த பங்குனி மாதத்தில்தான்.

ஜோதிடத்தில் சந்திரனை தாயாகவும், சூரியனைத் தந்தை என்றும் உருவகப்படுத்துவார்கள். சந்திரனாகிய தாய், தந்தையாகிய சூரியனுக்கு உரிய நட்சத்திரமான உத்திரத்தில் சஞ்சரித்து பவுர்ணமியைத் தோற்றுவிப்பது பங்குனி மாதத்தில். கார்த்திகை மாதத்தைப் போலவே, அம்மையப்பனின் இணைவாக இந்த மாதமும் சிறப்புப் பெறுவதால் சைவ, வைணவ பேதமின்றி அனைத்து ஆலயங்களிலும் தெய்வத் திருமணங்கள் இந்த மாதத்தில் நடைபெறுகின்றன.

நவகிரகங்களின் தலைவனான சூரியன் தனது ஆசிரியரான குருவின் வீட்டில் அதாவது மீனத்தில் சஞ்சரிக்கும் மாதம் இது. ஆண்டு முழுவதும் தான் பெற்ற பயிற்சியை தனது ஆசிரியரிடம் செய்து காட்டி தெளிவு பெறுவதாகக் கொள்ளலாம்.

பங்குனியில் குருவின் வீட்டில் சஞ்சரித்து முழுமையாக பக்குவம் அடைந்து அடுத்துவரும் சித்திரை மாதத்தில், அதாவது மேஷ ராசியில் சூரியன் முழுமையான உச்ச பலத்தோடு ஒளி வீசுவார். உச்ச வலிமை பெறுவதற்கு முன்னதாக ஆசிரியரிடம் பயிற்சி பெற்று பக்குவப்பட வேண்டும் என்பதை இந்தப் பங்குனி மாதம் நமக்கு நன்றாக உணர்த்துகிறது.

அதே போன்று கணக்குத் தணிக்கையாளர் என்று நவகிரகங்களில் குரு பகவானைக் குறிப்பிடுவார்கள். அரசு அலுவலகங்கள், கருவூலங்கள், வங்கிகள் என சூரியன் சார்ந்த அனைத்துத் துறைகளும் கணக்குத் தணிக்கைக்கு உட்படுத்தப்படுவதும் இந்த மாதத்தில்தான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் அரசன் முதல் ஆண்டி வரை நாம் அனைவரும் செய்யும் தவறுகளைத் திருத்திக் கொள்ளும் மாதமாக குரு பகவானின் ஆதிக்கம் நிறைந்த இந்த பங்குனி மாதம் விளங்குகிறது.

முருகனுக்கு உகந்த நாள் என்று காவடி எடுப்பதும் அலகு குத்தியும் பக்தர்கள் வழிபடுவார்கள் பழனியில் மிக சிறப்பாக பங்குனி உத்திரம் நடக்கும் பங்குனி உத்திரத்திற்கு அடுத்த நாள் இடும்பனை பூஜிப்பார்கள் எடுப்பது காவடி தடுக்கும் அபிஷேகம் நடக்கும் பழனி மலை ஏறும் பக்தர்கள் வழிபடுகிறார்கள் இந்த பங்குனி உத்திர திருவிழா முருகனுடைய எல்லாத் திருத்தலங்களிலும் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம் ஆக கொண்டாடப்படுகிறது

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் சிறப்பு வாய்ந்த பங்குனி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 15 நாட்கள் கொண்டாடப்படும் பங்குனி பெருவிழாவின் முக்கிய அம்சமான முருகன் தெய்வானை திருக்கல்யாணம் மதுரை மீனாட்சி சொக்கநாதர் முன்னிலையில் நடைபெறுகிறது. ஞானத்தின் வடிவான முருகப்பெருமான் கிரியாசக்தியை தன்னோடு இணைத்துக்கொள்ளும் தெய்விக நிகழ்வே முருகன் தெய்வானை திருமணம். ‘

நான்முகன் வேதம் ஓத, சூரிய சந்திரர்கள் தீபங்கள் ஏந்தி நிற்க, சிவ சக்தியர் ஆசி வழங்க, இந்திரன் தெய்வானையைத் தாரை வார்த்துக் கொடுக்க, சுப்பிரமணியக் கடவுள் தெய்வானையைத் திருமணம் செய்துகொண்டார்’ என்று முருகப் பெருமானுக்கும் தெய்வானைக்கும் நடைபெற்ற திருமணம் பற்றி திருப்பரங்குன்றம் தலபுராணம் விவரிக்கிறது.

தைப்பூசம், கந்தர் சஷ்டி, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம் என்பன போல் பங்குனி உத்திரம் என்றாலே அது முருகன் கோயில் திருவிழா நாள் என்று தான் எல்லோருக்கும் உடனே தோன்றுவது. எங்கெல்லாம் முருகன் கோயில் கொண்டுள்ளானோ அங்கெல்லாம் பங்குனி உத்திரம் தவறாமல் கொண்டாடப்படுவதால் பங்குனி உத்திரம் என்றாலே குமரக்கடவுளின் நினைவுதான் நமக்கு வருகிறது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முருகன் தெய்வானை உடன் மணக்கோலத்தில் மூலவராகக் காட்சியளிக்கும் ஒரே தலம் முதற்படை வீடான திருப்பரங்குன்றம்தான். முருகன் தெய்வானை திருக்கல்யாணம் பங்குனி உத்திர விழாவில் 11ஆம் நாள் நடைபெறுகிறது. திருப்பரங்குன்றம் கோயில் ஆஸ்தான மண்டபத் தூணில் தெய்வானை கல்யாணக் காட்சியைக் கண்டு மகிழலாம்.

இந்திரன் கன்னிகாதானம் அளிக்கும் கோலத்தில் உள்ளார். மீனாட்சி சொக்கநாதர் முன்னிலை முருகன் தெய்வானை திருமணத்தில் பங்கேற்க மதுரையில் இருந்து மீனாட்சியம்மன், பிரியாவிடையுடன் சுந்தரரேசுவரர் பங்கேற்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

மகனின் திருமணத்திற்காக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருப்பரங்குன்றம் வருவதால் அன்றைய தினம் மாலை வரை கோவில் நடை அடைக்கப்படும். திருக்கல்யாணத்திற்காக சோலைமலை முருகப்பெருமான் கோவிலில் இருந்து திருக்கல்யாண சீர்வரிசை கொண்டு வரப்படுகிறது.

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் பங்குனி உத்திர திருவிழா . பழனியில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.

தமிழ் மாதத்தின் 12 மாதமான பங்குனியில் 12 நட்சத்திரமான உத்திரம் இடம் பெறும் புனித நாள்தான் பங்குனி உத்திரமாகும். பல்வேறு சிறப்புகளையும், பெருமைகளையும் பெற்ற பங்குனி உத்திர திருவிழா “பிரமோற்சவ விழா” எனவும் அழைக்கப்படுகிறது.

கடும் கோடை வெப்பம் தொடங்கியுள்ள பங்குனி மாதத்தில் முருகபக்தர்கள் முருகனை குளிர்விக்கும் பொருட்டு கொடுமுடி சென்று காவிரி ஆற்று நீரை தீர்த்த காவடியாக எடுத்து வந்து அபிஷேகம் செய்வது, தொன்று தொட்டு நடைபெற்று வரும் ஒரு நிகழ்வாகும்.

பங்குனி உத்திர திருவிழா நாளன்று பல லட்சம் பக்தர்கள் கொடுமுடி சென்று தீர்த்தம் எடுத்து வந்து, முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். முருகன் தெய்வானை திருக்கல்யாணம் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சுவாமி – அம்பாள் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.

தெய்வங்களே உத்திரத்தை சிறந்த நட்சத்திரம் என்று தேர்வு செய்த பெருமை உண்டு.மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு. பன்னிரெண்டாவது மாதமான பங்குனியும், பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாள் பங்குனி உத்திரம். தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்கின்றன புராணங்கள்.
பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை:திருப்பரங்குன்றத்தில் முருகன் – தெய்வானை திருமணம் நடந்தது இந்த நாளில் தான்.

மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தாள். வள்ளி அவதாரம் செய்தது பங்குனி உத்திரத்தில்தான் .பிரம்மன், தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக் கொள்ளும்படியான வரத்தைப் பெற்றார். தன் மனைவி இந்திராணியை பிரிந்திருந்த இந்திரன், மீண்டும் அவளுடன் சேர்ந்த நாள் இது.சந்திர பகவான், கார்த்திகை, ரோகிணி உள்ளிட்ட 27 நட்சத்திரங்களை மனைவியராக அடைந்த புண்ணிய தினம்.

ராமபிரான் – சீதாதேவி, பரதன் – மாண்டவி, லட்சுமணன் – ஊர்மிளை, சத்ருக்னன் – ச்ருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த தினம்.இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது இந்த நாளில் தான். மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்தது இந்த நாளில் தான்.

ஆண்டாள் – ரங்கமன்னார் திருமணம் நடந்தது இந்த நாளில் தான். இந்த நாளில் தான் இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்தது.

பங்குனி உத்திரத்தில்தான் தர்மசாஸ்தாவான சபரிமலை ஐயப்பன் பிறந்தார். அர்ச்சுனன் பிறந்தது பங்குனி உத்திரத்தில்தான் அதனால் தான் அவனுக்கு பல்குனன் என்று பெயர். சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மணக்கோலத்தில் பரமன் காட்சி தந்தது இந்த நாளில்தான். சாஸ்தா அவதரித்தது பங்குனி உத்திர திருநாளில்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version