மதுவால் கொரோனா பாதிப்பு அதிகமாகும்… என்று உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. ஆயினும் இந்த எச்சரிக்கைகளை எல்லாம் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு டாஸ்மாக் விற்பனையில் வேகம் காட்டுகிறது தமிழக அரசு என்று குற்றம் சாட்டப் பட்டுள்ளது.
“மதுவால் கொரோனா வாய்ப்பு அதிகமாகும்” எனும் உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையை மருத்துவர் ராமதாஸ் தமது டிவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்!
“மது அருந்துவது மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். அதனால் மது அருந்துபவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அதனால் மது அருந்துவதற்கான வாய்ப்புகளையே இல்லாமல் செய்ய வேண்டும்” – உலக சுகாதார நிறுவனம் (WHO)
WHO – உலக சுகாதார மையத்தின் விளக்கம் குறித்து பலரும் சுட்டிக் காட்டி வருகையில், அந்த அறிவுரைகளை ஏற்காமல் மது விற்பனையில் தமிழக அரசு வேகம் காட்டி வருகிறது.
மதுகுடித்தால், அவர்களின் நோய் எதிர்ப்புச் சக்திக்கு குறைவுஏற்படும் என்றும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால், கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்றும், அப்படிப்பட்டவர்களுக்கு கொரோனா தாக்கத்துக்கு மருந்து கொடுத்தால் குணமாக்குவது கடினம் என்றும் கூறுகின்றனர்.
இதுகுறித்து இன்று மக்கள் நீதி மய்யத்தின் சார்பிலும் ஒரு பொதுநல வழக்கு பதிவு செய்யப் பட்டிருக்கிறது.
“நடுத்தர மக்கள் வீட்டில் கட்டுண்டு இருக்கின்றனர்; ஏழைகள் வாழ வழியின்றி தவிக்கின்றனர்; தற்போது டாஸ்மாக் திறந்து விட்டு, ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா?!” – என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ட்வீட்டில் கேட்டுள்ளார்.
தொடர்ந்து, மதுக்கடைகளை திறக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை விடுத்து உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் வழக்கு தொடர்ந்துள்ளது.
நீதிமன்றத்தின் நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்ற உத்தரவிட வேண்டும்; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டிய நிலையில், மதுவால் பாதிப்பு ஏற்படும் என்று அதில் குறிப்பிடப் பட்டிருக்கிறது.