தமிழக எல்லையில் மது குடித்துக் கொண்டிருந்தவர்களை அடித்து விரட்டி மது பாட்டில்களை பறித்துச் சென்றதாக புதுச்சேரி போலீசார் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருக்கும் போலீஸ்காரர் ஒருவரை போலீஸார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் பகுதி சித்தலம்பட்டில் சிலர் மது குடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த புதுச்சேரி போலீசார் மணிகண்டன், கோகுல், பிரசன்னா, செல்வம் ஆகியோர் மது குடித்தவர்களை மிரட்டி, அவர்களிடம் இருந்த மது பாட்டில்களைப் பறித்துக் கொண்டு அவர்களை விரட்டித்துள்ளனர்.
இது குறித்து புதுச்சேரி போலீஸ் தலைமையகத்திற்கு புகார் சென்றுள்ளது! இதில் அந்த போலீஸார் 4 பேரும் தவறாக நடந்து கொண்டிருப்பதும், மது பாட்டில்களை தங்களது சொந்த தேவைக்கு எடுத்துச் சென்று இருப்பதும் தெரியவந்தது.
இதை அடுத்து அந்த நான்கு போலீஸாரையும் சஸ்பெண்டு செய்து சீனியர் காவல் கண்காணிப்பாளர் ராகுல் ஆல்வா உத்தரவிட்டார். மேலும் அந்த நான்கு பேர் மீதும் திருக்கனூர் போலீசார் 7 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் செல்வம், கோகுல், மணிகண்டன் ஆகியோர் பிடிபட்டனர். அவர்கள் மூன்று பேரும் கொரோனா பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்கப் பட்டுள்ளனர்.
அவர்கள் மூவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று அறிக்கை வந்தவுடன், 3 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகக் கூறப் படுகிறது. இந்த விவகாரத்தில் தலைமறைவாக இருக்கும் காவலர் பிரசன்னாவை போலீசார் தேடி வருகின்றனர்.