மதுரை: மதுரை மாவட்டத்தில் இன்னமும் பல கண்மாய்கள் பராமரிக்க வேண்டிய நிலையில் உள்ளதாக, விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
மதுரை மாவட்டம், பேரையூர் வட்டத்தில், பெரும்பாலான கண்மாய்களில் மதகுகள், ஷட்டர்கள் ஆகியவை பராமரிப்பு இன்றி, பாழாகி வருகிறதாம். மேலும், இப் பகுதிகளில் போதியளவு மழையின்மையால், சீமை கருவேல மரங்கள் அதிகம் வளர்ந்துள்ளனவாம்.
பெரும்பாலான கண்மாய்களில் உள்ள ஷட்டர்கள் துருபிடித்த நிலையில் உள்ளன. மதுரை அருகே வண்டியூர் கண்மாயில் ஆகாய தாமரை செடிகளும், முட்புதர்களும் அதிகளவில் மண்டியுள்ளன. தற்போது கண்மாயில் நீர் உள்ளதால், மீன்களும் வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வண்டியூர் கண்மாய் கரையை மேலும் உயர்த்தி, கண்மாயை ஆழப்படுத்தினால், மதுரை அண்ணாநகர், மேலமடை, கோமதிபுரம், கே.கே.நகர், வண்டியூர் ஆகிய பகுதிகளில் கோடை காலங்களிலும் நீர் மட்டம் குறையாமல், ஆழ்துளைகளில் வீடுகளில் தண்ணீர் கிடைக்கும் என்றார் அண்ணாநகரைச் சேர்ந்த முத்துராமன்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை