மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தாதம்பட்டியில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா உள்ளது. இதில் 20க்கும் மேற்பட்ட ஆயத்தஆடைகள், பின்னலாடைகள் தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
மாலை 6 மணிக்கு சிறுமலை பகுதியிலிருந்து பலத்த சூறைக் காற்று வீசி சிறிது நேரத்தில் மழை விழுந்தது. இந்த சூறைக் காற்றினால் ஜவுளி பூங்காவின் உள்பகுதியில் சிமெண்ட்
கற்களால் கட்டப்பட்ட தடுப்புச் சுவர்கள் இடிந்து விழுந்தது. அதேபோல் ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் நிறுவனங்களின் மேல் அமைக்கப் பட்டிருந்த சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் கருவிகள் தூக்கிவீசப்பட்டு சேதமடைந்தது.
மேலும் பின்னலாடைகள் கம்பெனியின் உள்புறத்தில் தெர்மாகோல் மூலம் அமைக்கப்பட்ட ஷோகேஸ்களும் தூக்கிவீசப்பட்டன. அப்போது டமால் என்று சப்தம் கேட்டவுடன் பணியிலிருந்து பெண்கள் அலறி அடித்து ஓடினர்.
இந்த திடீர் சூறைக் காற்று புயல்காற்றை போல் வீசியதால் தென்னை மரங்கள், வாழைமரம், உள்ளிட்ட பல மரங்கள் பேயாட்டம் ஆடின. தாலுகா அலுவலகம் அருகில் புளிய மரக் கொப்புகள் ஒடிந்து விழுந்தன. இதனால் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை