உதகையில் பிசியோதெரபிஸ்ட் ஒருவர் வெட்டிவேர் முகக்கவசம் தயாரித்து அசத்தி வருகின்றார்.
கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை. நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் முக்கியமானது முகக்கவசம். இப்போது பல்வேறு முகக்கவசங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. நீலகிரி மாவட்டத்தில் வெட்டிவேரில் முகக்கவசம் செய்து அசத்தி வருகிறார், உதகையைச் சேர்ந்த ஐஸ்வர்யா.
பிசியோதெரப்பி மருத்துவராகப் பணியாற்றி வரும் ஐஸ்வர்யா, புதிதாக வெட்டிவேர் முகக்கவசம் தயாரித்து விற்பனை செய்கிறார்.
ஒரு கிலோ வெட்டிவேர் ரூ.1,000க்குப் பெற்று சாதாரண இரண்டு அடுக்கு துணி முகக்கவசத்தின் இடையில் அதை வைத்துத் தைத்து உருவாக்குகிறார்.
இது குறித்து ஐஸ்வர்யா கூறுகையில், “வெட்டிவேர் கார்பன்-டை-ஆக்ஸைடைக் கட்டுப்படுத்தும் வல்லமை பெற்றது. கொரோனா மட்டுமல்லாமல் எந்த வைரஸையும் உள்ளே அனுமதிக்காது. இது ஒரு சிறந்த கிருமிநாசினி. இதை துவைத்தும் பயன்படுத்தலாம்.
இதை நிறையப் பேர் வாங்குகிறார்கள். இந்த முகக்கவசம் 5 நாட்களுக்கு மேல் தொடர்ந்து பயன்படுத்தலாம்.
சென்னை, திருச்சி, கோவை உட்பட வெளி மாவட்டம் மற்றும் நாடு முழுவதும் வெட்டிவேர் முகக்கவசத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் ஆர்டரின் பெயரில் அவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.
ஒரு முகக்கவசம் தயாரிக்க ரூ.20 முதல் ரூ.23 வரை செலவு ஆகிறது. மொத்தமாக வாங்குவோருக்கு ரூ.25, தனியாக வாங்கினால் ரூ.30-க்கு விற்பனை செய்து வருகிறேன்” எனத் தெரிவித்தார்.