- பழிவாங்க காத்துக் கொண்டிருந்த உள்ளாட்சித் தேர்தல் விவகாரம் !
- ஊரக உள்ளாட்சி தேர்தலில் தோற்ற வேட்பாளர் வெற்றி பெற்ற பஞ்சாயத்து தலைவரை கொல்ல முயற்சி?
- கரூர் அருகே பரபரப்பு !!
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கடவூர் தாலுகா, வரவணை பஞ்சாயத்திற்கு உட்பட்ட, வ.வேப்பங்குடி பகுதியில் வசிப்பவர் கந்தசாமி. ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்.
தற்போது நடைபெற்ற வரவணை பஞ்சாயத்து தேர்தலில் சுமார் 200க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வரவணை பஞ்சாயத்து தலைவர்!
இந்த ஊராட்சியை முன் மாதிரி ஊராட்சியாக மாற்றும் முயற்சியில் பணிஆற்றி வருகிறார். அமெரிக்காவில் வசிக்கும் இவரது மகன் நரேந்திரன் கந்தசாமி, தனது ஊருக்காக கடந்த மூன்று வருடங்களாக பசுமைகுடி தன்னார்வ இயக்கம் என்ற சமூக அமைப்பை ஏற்படுத்தி மரங்கள் நட்டு பராமரிப்பதுடன், அதே வேப்பங்குடி பகுதியினை பசுமை குடியாக மாற்ற முயன்று வருகின்றனர்.
கடந்த 11 மாதங்களுக்கு முன்பு வேப்பங்குடி பகுதியில் சமுதாய காய்கறித் தோட்டத்தை ஏற்படுத்தி அதில் விளைந்த காய்கறிகளை அதே பகுதி பொதுமக்களுக்கும் கரூர் மாவட்டத்தைச் சார்ந்த பல்வேறு ஊர்களுக்கும் அளித்து வந்தனர்.
இந்நிலையில் ஏற்கெனவே இவரிடம் தேர்தலில் தோற்றுப்போன இவரது தம்பியும், ஊரக உள்ளாட்சி தேர்தலில் வரவணை பஞ்சாயத்து தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு படுதோல்வியடைந்த பழனியப்பன் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள புகார் பெட்டியில், வேப்பங்குடியில் அமைக்கப்பட்டுள்ள சமுதாய காய்கறி தோட்டம் 127 நபர்களுக்கு சொந்தம் என்று அதை அகற்ற வேண்டும் என்று கூறி ஒரு சிலருடன் சேர்ந்து புகார் போட்டார். அது சமூக வலைதளங்களிலும், நாளிதழிலும் செய்தியாக வந்திருந்தது.
பசுமைக்குடி தன்னார்வ அமைப்பினர், பல ஊர்களுக்கு இலவசமாக காய்கறிகள் கொடுத்து வந்த நிலையில் புகார் வந்ததையடுத்து அந்த இடத்தில் இருந்த சமுதாய காய்கறி தோட்டத்தை நிர்வாகத்தினர் அகற்றினர்.
இந்நிலையில் பத்தாம் தேதி நேற்று நள்ளிரவு, தேர்தலில் தோற்றுப்போன வெறுப்பில் இருந்த பழனியப்பன் தரப்பினர், வரவணை பஞ்சாயத்து தலைவர் கந்தசாமி வீட்டின் அருகே இருந்த கூரை வீட்டிற்கு தீ வைத்ததாகக் கூறப் படுகிறது. அக்கம்பக்கத்தினர் சேர்ந்து தீயை அணைத்ததுடன், சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இத்தகைய நிகழ்வால், வரவணை பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேப்பங்குடி பகுதியில் உள்ள பஞ்சாயத்து தலைவர் கந்தசாமி வீட்டின் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.