கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக அவுட்டுக்காய் என்னும் நாட்டு வெடிகுண்டு தயாரித்த 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் வனத்தையொட்டிய கல்லாறு என்ற இடத்தில், அவுட்டுக்காய் என்னும் நாட்டு வெடிகுண்டால், வன விலங்குகள் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.
அதாவது மேட்டுப்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் காட்டு பன்றிக்கு அவுட்டுக்காய் வைக்கும் பழக்கம் உள்ளது. இதனால் ஏற்கெனவே, யானைகள், மாடுகள் அவுட்டுக்காயால் உயிரிழந்துள்ளன. இதற்கிடையில் மேலும் ஒரு பசுமாடு கடந்த சில தினங்களுக்கு முன்பு அவுட்டுக்காய்யை சாப்பிட முயன்றபோது, வாய் சிதறி உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இதனையடுத்து சட்டவிரோதமான முறையில், அவுட்டுக்காய் தயாரிக்கும் கும்பலை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர், கல்லாறு பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட அவுட்டுக்காய் வைத்த குணசேகரன், ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதற்கிடையில் வனத்துறையினரின் வருகையை அறிந்த பிரகாஷ் என்பவர் தலைமறைவாகிவிட்டார்.
இதனையடுத்து வனத்துறையினர் பிரகாஷை தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையில் கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கோவில் திருவிழாவிற்கு பயன்படுத்தப்படும், ஒலி மிகுந்த பட்டாசுகளை வாங்கி வந்து, அதில் கூர்மையான இரும்பு துகள்களை நிரப்பி, இந்த அவுட்டுக்காய்யை தயாரிப்பதாக கூறியுள்ளனர்.
மேலும் காட்டு பன்றி, மாடு உள்ளிட்ட விலங்குகள் உண்பதற்காக கோழி இறைச்சியை வெடிகுண்டியின் மீது பூசியும், மான் போன்ற விலங்குகள் உண்பதற்கு பலாச் சுளைகளை பூசியும் வைப்பதாக கூறியுள்ளனர்.