நிர்வாக ரீதியாக தமிழகத்துக்குத் தேவைப்பட்டால் பாரதிய ஜனதா கட்சியுடனும் கைகோக்கத் தயாராக இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நாளிதழ்களுக்கு நடிகர் கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார். அதில், “அரசியலில் தீண்டாமை என ஒன்று இல்லை.
பாரதிய ஜனதா கட்சியின் வலதுசாரி கொள்கைகள் எனக்கு அதிருப்தி அளிப்பவைதான். ஆனால், குறைந்தபட்ச செயல் திட்டம் உருவானால், அக்கட்சியுடன் தொடர்பு வைத்துக் கொள்வதில் எனக்கு ஒன்றும் தயக்கம் இல்லை” என்று கூறியுள்ளார்.
முன்னதாக, தேர்தலில் போட்டியிட்டு சட்ட ரீதியான பொறுப்பை ஏற்கும் சூழ்நிலை ஏற்பட்டால், சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விடப் போவதாகக் கூறியுள்ள கமல், அரசியலில் ஈடுபடும் முடிவை உணர்ச்சிவசப்பட்டு எடுக்கவில்லை, நிதானமாக யோசித்தே முடிவு எடுப்பதாகவும் கூறியுள்ளார் கமல்ஹாசன்.
கட்சி, கொடி, சின்னம் என, அனைத்தையும் இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறியுள்ளார் கமல். அனேகமாக இந்த வருடத்தின் இறுதிக்குள் கட்சி தொடங்கவுள்ளதாகக் கூறியுள்ளார்.
முன்னதாக கேரள கம்யுனிஸ்ட், தில்லி அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரை சந்தித்து ஆலோசனை கேட்ட போதும், இனி மேற்கு வங்க மம்தா பானர்ஜியை சந்தித்து ஆலோசிக்கவிருப்பதாகவும் கமல்ஹாசன் கூறியபோது அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வந்தவர்கள், இப்போது அவரது அந்தர் பல்டியைக் கண்டு விக்கித்துப் போயிருக்கிறார்கள்.