ஒரு காலத்தில் கல்யாண சத்திரம் எல்லாம் திரையங்குகளாக மாறின. காலச்சக்கரம் சுற்றி வர சில ஆண்டுகளாகவே மீண்டும் திரையரங்குகள் எல்லாம் கல்யாண மண்படபங்களாக மாறின.
சென்னையில் ராம் தியேட்டர், காமதேனு தியேட்டர் எல்லாம் திருமணம் மண்டபங்களாக மாறிவிட்டன. மேலும் பல தியேட்டர்கள் வணிக வளாகங்களாக மாறிவிட்டன.
வணிக வளாகமாகவும் உருவெடுத்த அபிராமி தியேட்டர், தற்போது வணிக வளாகம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு என்ற நிலைக்கு மாறிவிட்டது.
படம் வெளியிடுவதில் காலப்போக்கில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, தியேட்டர்களும் நிறம் மாறிவிட்டன. இது போலவே, சென்னையின் விக்ரம் ஸ்டூடியோ, சியாமளா ஸ்டூடியோ உள்ளிட்ட பெரும்பாலான ஸ்டூடியோக்கள் வணிக வளாகங்களாகவும், அடுக்குமாடி குடியிருப்புகளாகவும் மாறிவிட்டன
ஏ.வி.எம். ஸ்டூடியோவும் இந்த நிலைக்கு தள்ளப்பட்டதுதான் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஏற்கனவே ஏவி.எம். ஸ்டுடியோவின் ஒரு பகுதி அடுக்குமாடி குடியிருப்பாகவும், மருத்துவமனையாக மாறிவிட்டது. தற்போது டப்பிங் உள்ளிட்ட பல பணிகளும், படப்பிடிப்புகளும் நடைபெற்று வந்த ஏவி.எம். கார்டன் பகுதியை திருமண மண்டபமாக மாற்ற நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
சென்னையிலேயே குறைந்த விலை டிக்கெட் என்றால் அது ஏவி.எம். ராஜேஸ்வரி தியேட்டர்தான். அதுவும் மூடப்பட்டுவிட்டது.
ஆண்ட்ராய்டு போன்கள்தான் திரையரங்குகள் என்றாகிவிட்ட நிலையில் திரையரங்குகள் நிறம்மாறுவது ஒருபக்கம் இருக்க, ஸ்டூடியோக்களும் நிறம் மாறுவது அதிர்ச்சியளிக்கிறது.