திருப்போரூர் கந்தசாமி கோவில் சொத்துக்களை பத்திரப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோவில் மற்றும் ஆளவந்தார் கோவில்களுக்கு சொந்தமான 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பத்திரப்பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
திருப்போரூர் கோவிலுக்கு சொந்தமான 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பாதுகாக்கக் கோரி வழக்கறிஞர் ஜெகன்நாத் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மறுஉத்தரவு வரும் வரை இவ்விரு கோவில் சொத்துக்களையும் யாருக்கும் பத்திரப் பதிவு செய்யக்கூடாது என திருப்போரூர் சார்பதிவாளருக்கு உத்தரவிட்டனர்.
தமிழக அரசும், இந்து சமய அறநிலைத்துறையும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பர் 10 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
முன்னதாக, இந்த கோயில் சொத்துகளை கபளீகரம் செய்யவும், முறைகேடாக கையகப் படுத்திக் கொள்ளவும் சிலர் முயன்றதும், அண்மையில் துப்பாக்கிச் சூடும் இது தொடர்பில் நடந்ததும் குறிப்பிடத் தக்கது.