ராஜபாளையம் : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நத்தம்பட்டி செல்லும் சாலைப்பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிணற்றில், சாக்கு மூட்டையில் கட்டிய நிலையில் 50 வயது மதிக்கத் தக்க பெண் சடலம் மீட்கப்பட்டது. கீழராஜகுலராமன் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜபாளையம் அருகே நத்தம்பட்டி செல்லும் சாலையில் கொட்டாரை கண்மாய் பகுதியில், பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிணறு பராமரிப்பு இன்றி உள்ளது. அந்தப்பகுதியில் துர்நாற்றம் வீசியதையடுத்து, அந்தப்பகுதியில் சென்றவர்கள் கிணற்றுக்குள் பார்த்தனர்.
அப்போது, சாக்கு மூட்டையில் கட்டிய நிலையில் சடலம் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் ராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாகசங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, கிணற்றில் மிதந்த 50 வயது மதிக்கத் தக்க பெண் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து கிடந்த பெண் யார்? அவரை கொலை செய்து மூட்டை கட்டி கிணற்றில் வீசியது யார் என போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை