திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவில் இன்று மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. முன்னதாக, இன்று அதிகாலை 4:00 மணிக்கு கோவிலிலில் சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் தீப தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த நவ. 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதில் முக்கிய நிகழ்வான கார்த்திகை தீபம் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் இன்று மாலை 6 மணிக்கு ஏற்றப்பட உள்ளது. இதை முன்னிட்டு அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு மூலவர் அருணாசலேசுவரர், உண்ணாமுலையம்மன், உத்ஸவ மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேசுவரர், பராசக்தி அம்மன், மற்றும் சண்டிகேசுவரர், ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டன.
தொடர்ந்து,சுவாமி கருவறையில் கற்பூர தீபம் ஏற்றி, 10க்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள் வேதபாராயணம் ஓத, வேத மந்திரங்கள் முழங்க அந்த கற்பூர தீபத்திலிருந்து ஒரு மடக்கில் நெய்த் திரியிட்ட விளக்கு ஏற்றப்பட்டு பின்னர் பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் ஐந்து மடக்குகளில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இன்று மாலை 6 மணிக்கு மலை உச்சியில் ஏற்றப்படும் கார்த்திகை மகாதீபத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர்.