திடீர் மூச்சுத் திணறலால், தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் நடிகர் கார்த்திக் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சில படங்களில் கவுரவக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் கார்த்திக். மேலும், மனித உரிமைகள் காக்கும் கட்சி என்ற கட்சியையும் நடத்தி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களைச் சந்தித்த கார்த்திக், அதிமுக கூட்டணிக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.
மேலும், அரசியலில் தனது நிலைப்பாடு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்துப் பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார்.
நேற்றிரவு அதிமுக – பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காகத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
அப்போது அவருக்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக, ஆம்புலன்ஸ் உதவியுடன் சென்னை அடையாற்றில் உள்ள மலர் ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளும் செய்யப்பட்டன. கார்த்திக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், நெகட்டிவ் என்பது தெரியவந்துள்ளது. அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.