Home உள்ளூர் செய்திகள் ஆசிரியைக்கு கொரோனா: தேர்தல் பயிற்சிக்கு சென்றதால் அலுவலர்கள் பீதி!

ஆசிரியைக்கு கொரோனா: தேர்தல் பயிற்சிக்கு சென்றதால் அலுவலர்கள் பீதி!

corona-test
corona test

பெரம்பலூர் நகரில் பள்ளி ஆசிரியர் தம்பதியினர், அவரது மகன் திருச்சி கல்லூரி மாணவர் ஆகிய மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

பெரம்பலூர் நகராட்சி, எளம்பலூர் சாலையில் வசித்து வரும் 49 வயது மதிக்கத்தக்க சித்தளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் ஒருவருக்கு கடந்த 15ம் தேதி சளி மற்றும் இருமலுடன் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதற்காக மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் சரியாகாததால் அவர் 17ம் தேதி பெரம்பலூர் அரசுத் தலைமை மருத்துவமனையில் இருதய எக்ஸ்ரே பரிசோதனை செய்துள்ளார்.

அதற்கேற்ற பரிந்துரைப்படி மாத்திரை சாப்பிட்டும் காய்ச்சல் சரியாகாததால் 19ம்தேதி திருச்சி தனியார் மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு பாசிட்டிவ் என பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

உடனே அதே தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இவர் கடந்த 10ம்தேதி கொரோனா தடுப்பூசி முதல்டோஸ் போட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு இவர் கடந்த 17ம் தேதி மேலமாத்தூர் தனியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குன்னம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சியில் தனது மனைவி சிறுகுடல் பள்ளி ஆசிரியையுடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் டாக்டர் கீதாராணி உத்தரவின் பேரின் சித்தளி ஆசிரியரின் மனைவி, திருச்சி தனியார் கல்லூரியில் படிக்கும் மகன் உள்ளிட்ட 4 பேர்களுக்கும் அதே தெருவை சேர்ந்த 50 பேர்களுக்கும், மேலமாத்தூர் தனியார் மேல்நிலைப் பள்ளியில் 17ம்தேதி இவருடன் சேர்ந்து பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், தேர்தல் பயிற்சியாளர் உள்பட 30பேர்களுக்கும், சித்தளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 7 பேர், ஆசிரியரின் மனைவி பணிபுரிந்த சிறுகுடல் பள்ளி ஆசிரியர்கள் 10பேர் என மொத்தம் 100 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் கொரோனா பாதித்தவரின் ஆசிரியை மனைவிக்கும், திருச்சி தனியார் கல்லூரி மாணவனான 1 மகனுக்கும் என 2பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் திருச்சியில் ஆசிரியர் சிகிச்சைபெறும் அதே தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்து பெரம்பலூர் நகராட்சி ஆணையர் குமரி மன்னன் உத்தரவின் பேரில் சாலையில் உள்ள ஆசிரியரின் வீடு அவர் ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனை செய்து வந்த காமராஜர் வளைவு அருகே உள்ள கடை ஆகியவை, பேரிகார்டு அமைத்து கிருமிநாசினிகள் தெளித்து, இதர நபர்கள் அங்கு பிரவேசிக்கக் கூடாது என வலியுறுத்தப் பட்டுள்ளது. சித்தளி, சிறுகுடல் ஆகிய 2 பள்ளிகளையும் சில தினங்கள் மூடி வைக்க சுகாதாரத் துறை சார்பாக உத்தரவிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version