கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவரும் நிலையில், தமிழ்ப் பாரம்பரிய மருத்துவத்தை நாடிச் செல்லும் மக்களும் அதிகரித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகையும் பாஜகவில் கலை பிரச்சார பிரிவின் தலைவருமான காயத்ரி ரகுராம் கோரிக்கை ஒன்றை வைத்து, அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “தமிழ் மருத்துவத்தின் பயன்களை உலகம் முழுவதும் கொண்டு செல்வதற்கு தமிழ் மருத்துவத் துறைக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும்.
தமிழகத்தில் மே 2ஆம் தேதிக்கு பிறகு ஆட்சிக்கு வருபவர் யாராக இருந்தாலும், வருமுன் காப்போம் என்ற பொன்மொழிக்கேற்ப கொடும் நோய் தொற்றை தடுக்க தமிழ் பாரம்பரிய மருத்துவமுறைகளை மக்களிடம் முன்னெடுத்து செல்வது அவசியமானது.
தமிழ்நாட்டில் இருந்து இதனை முன்னெடுக்காவிட்டால், இதை யார் முன்னெடுப்பது? கடுந்தொற்று காலத்திலும் மாநகரங்கள் முதல் கிராமங்கள் வரை தமிழ் மருத்துவத்தின் மகத்துவத்தை சொல்லி, மக்களை அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றியது தமிழ் பாரம்பரிய மருத்துவமுறைகள்தான்.
அதனால், அதன் மகத்துவத்தையும், பெருமையையும் உலகம் முழுக்க கொண்டு செல்ல வேண்டிய தலையாய கடமை நமக்கு உள்ளது. இதற்கு அரசு ஆவண செய்ய வேண்டும்.
சித்தர்களின் தமிழ் மருத்துவக் களஞ்சியங்களை ஓலைச்சுவடிகள் வழியாக வழங்கி அருந்தொண்டாற்றும் தமிழ் வளர்ச்சித் துறையோடு இணைந்து, தமிழ் மருத்துவத்துறைக்கு தனியாக அமைச்சகம் அமைக்கவும் அரசு ஆவண செய்ய வேண்டும்” என்று காயத்ரி ரகுராம் கோரிக்கை விடுத்துள்ளார்.