நெல்லை அருகே பொதுமக்கள் கோரிக்கை விடுத்த மறுநாளே குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நெல்லை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் நிறைவேற்றியுள்ளார்.
நெல்லையை அடுத்த சுத்தமல்லி அருகே பழவூர் கிராமத்திற்கு நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் சென்றிருந்தார். அப்போது அப்பகுதி மக்கள் அவரிடம் எங்கள் தெருவிளக்கு, குடிநீர் வசதி, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தாங்கள் நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உடனடியாக பாப்பாக்குடி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கிராமத்துக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் நேற்று காலை பழவூர் கிராமத்துக்கு பாப்பாக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி நேரில் வந்து பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டார். அடுத்து, தெருவிளக்கு குடிநீர் பிரச்சினைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுத்தார். சிறிது நேரத்தில் கிராமத்தில் பழுதாகி உள்ள தெருவிளக்குகள் சரிசெய்யும் பணி தொடங்கியது. மேலும் பல இடங்களில் புதிய தெரு விளக்குகள் பொருத்தும் பணியும் நடைபெற்றது.
இதேபோல் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் உடனடியாக அடைப்பு சரிசெய்யப்பட்டது. அனைத்து தெருக்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்யும் பணி உடனே தொடங்கியது.
கோரிக்கை வைத்த உடனே அதிகாரிகளை தொடர்பு கொண்டு, மறுநாளே அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்த சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனின் நடவடிக்கைக்கு அப்பகுதி கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
இந்த ஆய்வின் போது பழவூர் கிராம எழுத்தர் கந்தசாமி மாணவர் ஒன்றிய பாஜக தலைவர் அங்குராஜ், ராணுவப் பிரிவு மாவட்ட தலைவர் சங்கர், ஒன்றிய நிர்வாகி கோபிநாத், பழவூர் பாஜக தலைவர் அருணாசலம், பழவூர் சதீஷ் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.