தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் கிறிஸ்துவ மதபோதகர் ஒருவரை உறுப்பினராக நியமனம் செய்ததற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசு தேர்வாணையத்தில் உறுப்பினராக ஒரு மத போதகரா? அரசின் நோக்கம் என்ன?
தமிழக அரசு தேர்வாணையத்தில் கிறிஸ்தவ பாதிரியார் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதை இந்து முன்னணி பேரியக்கம் சார்பில் மிக கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
கிறிஸ்தவ மதத்தின் போதகரான பாதிரியார் எவ்வாறு நடுநிலையாளராக இருக்க முடியும்? இதுவரை தமிழகத்தை ஆண்ட எந்த கட்சியும் செய்ய துணியாததை திமுக அரசு செய்வதன் உள்நோக்கம் என்ன என இந்து முன்னணி கேட்கிறது.
பொதுவாகவே திமுக அரசு பதவியேற்றதில் இருந்தே கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் முக்கிய பதவிகளில் நியமித்து வருகிறது. திமுக தேர்தலுக்கு முன் எங்கள் கட்சியில் 90% இந்துக்கள் இருக்கிறார்கள் என கூறி, வென்ற பின்பு பெரும்பான்மை இந்துகளை அச்சுறுத்தும் வகையில் கிறிஸ்தவ, முஸ்லிம் மதவாதிகளை முக்கிய அரசு பொருப்பில் நியமிக்கிறது.
ஏற்கனவே தமிழக அரசு பாடநூல் நிறுவனத்திற்கு ஆபாச பேச்சாளரான கிறிஸ்தவர் லியோனியை நியமித்து வருங்கால சந்ததியினரின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கியுள்ளது.
இந்து மதத் தலைவர்களை இது போல உயர் பதவிகளில் நியமிக்கும் தைரியம் இந்த அரசுக்கு இருக்குமா? அவ்வாறு நியமித்திருந்தால் எத்தகைய கண்டனங்களை இந்த அரசு எதிர்கொண்டிருக்கும்.
தற்போதைய இந்த கிறிஸ்தவ மத போதகர் நியமனம் என்பது, இந்த அரசு மதசார்பற்ற அரசு அல்ல, இது கிறிஸ்தவ, முஸ்லிம்களுக்கு மட்டுமே ஆன அரசு என்பதை உறுதிப் படுத்தியுள்ளது என மக்கள் நினைக்கின்றனர்.
இத்தகைய மத சார்புடைய நியமனங்களை தமிழக அரசு முக்கிய கொள்கையாக கொண்டு செயல்படுவதை இந்து முன்னணி பேரியக்கம் வன்மையாக கண்டிக்கிறது. அரசுப் பணிகளில் மதவாத நியமனங்களை இரத்து செய்ய வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்துகிறது.