தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து முந்தைய அதிமுக., அரசால் பிறப்பிக்கப்பட்ட சட்டம் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி தமிழக அரசு சட்டம் இயற்றியது. ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு இயற்றிய சட்டத்தை ரத்து செய்யக் கோரியும், செல்லாது என அறிவிக்கக் கோரியும் ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.
பின்னர், இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள சட்டம், அரசியல் சாசனத்திற்கு விரோதமானது. முழுமையாக இல்லாமல் போதுமான காரணங்களை விளக்காமல் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதால் அது செல்லாது என உத்தரவிட்டனர்.
மேலும், உரிய முறைப்படுத்தும் விதிகள் இல்லாமல் ஆன் லைன் விளையாட்டுக்களுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், உரிய விதிகளுடன் புதிய சட்டம் கொண்டு வர அரசுக்கு எந்தத் தடையும் இல்லை எனவும் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.