அரசின் அனைத்துத் தரப்பிலான தோல்விகளையும் மூடி மறைப்பதற்காக, திமுக., அரசு மேற்கொண்டு வரும் நீட் நாடகத்தில், இன்று நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணிப்பதாக, பாஜக.,வைத் தொடர்ந்து அதிமுக.,வும் அறிவித்துள்ளது.
நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை இன்று காலை 11-00 மணி அளவில், தலைமைச் செயலகத்தில் தமிழ் மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு கடந்த 3ஆம் தேதி ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அதன்படி இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக., பங்கேற்காது என அக்கட்சி அறிவித்துள்ளது. கடந்த முறை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பரிந்துரைத்த கருத்துகளை தமிழக அரசு முறைப்படி செயல்படுத்தவில்லை என்பதால் இன்றைய கூட்டத்தை புறக்கணிப்பதாக அதிமுக., தெரிவித்துள்ளது.
முன்னதாக, நீட் விலக்கு மசோதாவை சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பினாலும், அது திரும்பி வரும் என்பது நன்றாகத் தெரிந்தும், அதை வைத்து அரசியல் செய்யலாம் என் திமுக., தப்புக் கணக்கு போடுவதாக பாஜக., தமிழகத் தலைவர் கே.அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். எனவே, இன்று நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டம் வெறும் கண் துடைப்பு என்பதால் பாஜக., இதில் பங்கேற்காது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், பாஜக.,வைத் தொடர்ந்து, அதிமுக.,வும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்திருப்பதால், இது திமுக.,வின் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் என்று ஆகியுள்ளது.