பன்னாட்டு அருங்காட்சியக நாள் 1977 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
சர்வதேச அருங்காட்சிய தினத்தைமுன்னிட்டு புதுச்சேரியில் சுகாதாரத்துறையில் சுகாதார உதவி ஆய்வாளராக பணி புரியும் அய்யனார் சாமிப்பிள்ளை தோட்டத்தில் உள்ள தனது வீட்டில் 28 ஆண்டுகளாக தாம் சேர்த்து வைத்துள்ள பழங்கால சமையல் புழங்கு பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளார்.
நமது முன்னோர்கள் பயன்படுத்திய பித்தளை, வெங்கலம், செம்பு மற்றும் மரத்தாலான பொருட்களை காட்சி படுத்தி இருந்தார்.
பழங்காலத்தில் பயன்படுத்திய பெரிய பானைகள், குடங்கள் , இட்லி பாத்திரங்கள் , பல்வேறு வகையான குஜாக்கள், கொப்பரைகள், எண்ணை குடம், வெந்நீர் தவளை, பெரிய தீர்த்த தவளை, கும்பகோணம் குடம், பித்தளை வாளி, காது வைத்த கொப்பரை, கங்காளம், அடுக்கு, அரை அடிக்கு, அன்னக் கூடை, வெண்ணைத்தாழி, அரிக்கன் சட்டி, ஆனைக்கல் போகினி, தூக்கு, ரச வாளி, ரயில் குஜா , லோட்டா சொம்பு, டம்ளர், வெங்கல பானை, அஞ்சரை பெட்டி ,சம்படம், வெண்கல உருளி, கிண்டி ,கும்பா ,பால் சொம்பு, குண்டு சொம்பு, மன்னார்குடி சொம்பு, காபி பில்டர் போன்றவற்றை தனது இல்லம் முழுவதும் வரிசைப்படுத்தியுள்ளார் அய்யனார்.
பித்தளை சல்லடை, கேரியர், பூ கூடைகள் ,தாம்பலம், ஜல்லி கரண்டி, துடுப்பு, தட்டைக் கரண்டி, குழிக்கரண்டி, வால் கரண்டி ,மரக்கா, அரைப்படி ,திருச்சூர் கரண்டி ,வடி தட்டு, மற்றும் பலவகையான புழங்கு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
தனது வீட்டையே பழங்கால பொருட்களின் காட்சி அரங்கமாக மாற்றியுள்ள அரசு ஊழியர் நடத்தும் கண்காட்சியை உள்ளூர் மாணவர்களும் வெளிமாநில மாணவர்களும் பொது மக்களும் தமிழ் ஆர்வலர்களுடன் ஆச்சரியத்துடன் கண்டு வியக்கின்றனர்.