இந்த முறை பொங்கல் பண்டிகை தமிழக மக்களுக்கு கரும்பு விவசாயிகளின் கண்ணீரில் விளைந்த உப்புச் சுவையில் தான் கழியப் போகிறது. பொங்கல் அன்று இனிப்புப் பரிமாறும் அவர்களின் வாழ்வில் பெரும் பாரத்தை இறக்கியுள்ளது தமிழக அரசு.
வரும் தைப்பொங்கலுக்கு கார்டுதாரர்களுக்கு பணமும், அரிசி, வெல்லம் ஆகிய பொருள்கள் தரப்படும் என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது. இது பெரும் எதிர்பார்ப்பில் இருந்த கரும்பு விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பில், – ‘2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடிட, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000/- ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணை!
2023-ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வருகிற 2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000/- வழங்கிட முடிவு செய்யப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இதன்மூலம் அரசுக்குச் சுமார் ரூ.2.356.67 கோடி செலவினம் ஏற்படும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை 2.1.2023 அன்று சென்னையிலும், அன்றைய தினமே மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர் பெருமக்களும் தொடங்கி வைப்பார்கள்… – என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
முன்னதாக கடந்த வருடம் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஊழல் பெருமளவில் நடைபெற்றதால் பாஜக ஆர்ப்பாட்டங்களையும் விமர்சனங்களையும் செய்தது. மேலும் பொதுமக்கள் வெல்லம் கரும்பு உள்ளிட்ட பொருள்கள் தரமற்றதாக இருந்ததை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்தனர் இந்த நிலையில் இந்த முறை பணமாக மட்டும் கொடுக்கப்படலாம் என்று கூறப்பட்டது. எனவே பொங்கல் பரிசு பொருட்கள் தொகுப்பு குறித்து எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால் தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் ஆயிரம் ரூபாய் படம் ஒரு கிலோ அரிசி சர்க்கரை மட்டும் பொங்கல் பரிசு தொகுப்பில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை அடுத்து கரும்பு விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். பெரும் செலவு செய்து அரசின் பொங்கல் கரும்பு கொள்முதலை எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகள் அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் ஆதங்கத்தை அரசு காது கொடுத்து கேட்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் மதுரை மாவட்ட விவசாயிகள் தெரிவித்தபோது…
“நாங்கள் மதுரை கிழக்கு மாவட்ட சிறு மற்றும் குறு விவசாமிகள். இந்த வருடமும் முந்தைய வருடங்களைப் போல் பொங்கல் கரும்பு நன்றாக விளைவித்துள்ளோம் பல வருடங்களாக அரசு மக்களுக்கு நியாய விலை கடை மூலம் பொங்கலுக்கு கரும்பு கொடுத்துக் கொண்டுள்ளது.
இந்த வருடம் வந்த அறிவிப்பு ஏமாற்றத்தைத் தந்துள்ளது. ஒவ்வொரு விவசாயியும் வட்டிக்கு கடன் வாங்கியும், தாலிமுதற் கொண்டு அடகு வைத்து கரும்பை நல்ல படியாக வளர்த்துள்ளோம். இந்த கரும்பை பொங்கலுக்கு மட்டுமே பயன் படுத்த முடியும். இந்த வருடமும் முந்தைய வருடங்களைப் போல கரும்பு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து விவசாயிகளை மீளாத் துயரிலிருந்து காப்பாற்ற தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம்.. என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, கரும்பு விவசாயிகள் சில இடங்களில் சாலை மறியல் போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.