“தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது; பொது இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட வேண்டும்” என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
முகக்கவசம் அணிவதில் அரசின் நிலைப்பாட்டை தெரியப்படுத்த வேண்டும் என்றும், கொரோனா பரவலை தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
சட்டப்பேரவையில் இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் “தமிழகத்தில் மட்டுமில்லை, பிற மாநிலங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது என்று விளக்கம் அளித்தார். மேலும், “அனைத்து மருத்துவமனைகளிலும் முகக்கவசம் கட்டாயம் ஆக்கப் பட்டுள்ளது என்றும், “கொரோனா பரவலை தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிவது நல்லது என்றும் கூறினார்.
கொரோனா பாதிப்பு அதிகரித்தால், பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்படும், நான்காவது அலை என இப்போதைக்கு கூற முடியாது என்று, கொரோனா பரவல் குறித்த எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.
மேலும், “ஒமிக்ரான் வைரஸ் உயிர் பாதிக்கும் தொற்று இல்லை’ என்று விளக்கம் அளித்தவர்,“இணை நோய் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.. எந்த பாதிப்பு வந்தாலும் அவர்கள் இறப்பை சந்திக்க நேரிடும்” என்று, கொரோனா தொற்று பரவல் குறித்து சட்டப்பேரவையில் விளக்கமளித்தார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
இந்தியாவில் மேலும் 5,676 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 37,093-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு நோய்த்தொற்று அதிகரித்து கொண்டிருக்கிறது.
தற்போது தினசரி பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டி வேகமாக அதிகரித்து செல்வதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் இன்று நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 37,093 ஆக பதிவாகியுள்ளது.