
தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவியை மருத்துவமனை கொண்டு வரும் வழியில் ரயில்வே கேட் மூடப் பட்டிருந்ததால், காத்திருந்த நேரத்தில் உயிர் பிரிந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
மதுரை திருமங்கலம் அருகே தற்கொலைக்கு முயன்ற மாணவி மயங்கிய நிலையில் உறவினர்கள் இருசக்கர வாகனத்தில் திருமங்கலம் அழைத்து வந்த போது ரயில்வே கேட் மூடப்பட்டதால் கேட் திறப்பதற்குள் மாணவியின் உயிர் பிரிந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள விருசங்குளம் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி – ஈஸ்வரி தம்பதியினர் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், வெள்ளைச்சாமி இளைய மகள் மகள் பிரபாவதி 17 கப்பலூர் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், திடீரென கல்லூரி மாணவி வீட்டில் கதவைப் பூட்டிக் கொண்டு வீட்டிலிருந்த கயிறால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதைக்கண்ட குடும்பத்தினர் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து கயிறை அறுத்து மாணவியை காப்பாற்ற நிலையில், மாணவி பிரபாவதி மயங்கி நிலையில் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, உறவினர்கள் இருசக்கர வாகனத்தில் மாணவியை அமர வைத்து, திருமங்கலம் அரசு மருத்துவமனை நோக்கி காலை ஏழு முப்பது மணி அளவில் வந்த போது, திருமங்கலம் ரயில் நிலையம் அருகே இருந்த ரயில்வே கேட் ரயில் வருகைக்காக மூடப்பட்டது. மாணவி நிலை குறித்து கேட் கீப்பர் இடம் தெரிவிக்கப்பட்டும், ரயில் அருகில் வந்ததால் கேட்டை திறக்க முடியாது என தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
உடனடியாக அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த ஆம்புலன்ஸ் கேட்டின் மறுபக்கம் நிற்க மாணவி பிரபாவதியை தூக்கிகொண்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்குக் கொண்டு வந்தனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர், ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதைக் கேட்ட குடும்பத்தினர் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து மாணவி தற்கொலை குறித்து திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கெனவே, திருமங்கலம் ரயில்வே கேட்டால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வரும் நிலையில் இன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டுவரப்பட்ட கல்லூரி மாணவி ரயில்வே கேட் மூடப்பட்டதால், உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதற்கு மாற்று வழி கண்டறிய வேண்டுமென பொதுமக்கள் கூறினர்.