காஷ்மீர், பாரதத்தின் மணிமகுடம் என்ற அருமையான வரலாற்றுக் கண்காட்சி நடைபெற்றது. இதில் சில சுவையான தகவல்கள் இடம்பெற்றிருந்தன.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா கல்யாணபுரம் ஸ்ரீவத்ஸத்தில் காஷ்மீர் நமது நாட்டின் மகுடம் எனும் தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் தலைமை வகித்துப் பேசினார்.
கும்பகோணம் அருகிலுள்ள கல்யாணபுரத்தில் ஸ்ரீவத்சம் ஹாலில் டி. கே. வி. ராஜன் என்பவர் அமைத்துத் தந்த காஷ்மீர் பற்றிய கண்காட்சி சிறப்பாக மூன்று தினங்கள் நடைபெறுகிறது. இதில், தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சுவாமி விமூர்த்தானந்தா கலந்து கொண்டு தொடங்கி வைத்துப் பேசினார்.
காஷ்மீர் பிரதேசம் பாரதத்தின் பாரம்பரிய சிறப்பு கொண்டது. ஸ்ரீசாரதா அம்பாளின் அருளால் ஆதிசங்கரர், ராமானுஜாச்சாரியார், திருமூலர், அபிநவ குப்தர் மற்றும் சுவாமி விவேகானந்தர் போன்ற பல மகான்கள் அங்கு சென்று தவமியற்றி பாரதத்தின் ஆன்மீகம், தத்துவம், மருத்துவம், இலக்கியம் போன்றவற்றைத் தழைத்தோங்கச் செய்தார்கள்.
அப்படிப்பட்ட காஷ்மீரத்தின் பெருமையைப் புரிந்து கொண்டு அதைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். மிக முக்கியமாக, பாகிஸ்தான் நம்மிடமிருந்து பிடுங்கிய பகுதியை நம் மத்திய அரசாங்கம் மீட்க வேண்டும், முழு காஷ்மீரும் பாரதத்தின் ஒரு பகுதியே என்று கூறி, சுவாமி விமூர்த்தானந்தா இந்தக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.
இந்தத் தொடக்க நிகழ்ச்சியில், சீதாராமன், திருமூலருக்கும் காஷ்மீருக்கும் உள்ள தொடர்பைப் பற்றி உரையாற்றினார்.
தொல்லியல் ஆய்வாளர் டி.கே. வி. ராஜன் பேசுகையில், காஷ்மீரத்துக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள தொடர்பு 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. கி.பி. 6ம் நூற்றாண்டிலேயே, காஞ்சிபுரத்திலிருந்து பல மாணவர்கள் இந்து மற்றும் பவுத்த மதங்களைப் படிப்பதற்காக காஷ்மீருக்கு சென்றுள்ளார்கள். இதற்கு இலக்கிய ஆதாரங்கள் உள்ளன.
இளைய தலைமுறைக்கு காஷ்மீர், இலங்கையின் பெருமை, அதன் பங்களிப்பு தெரிய வேண்டும். பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் காஷ்மீர், இலங்கை வரலாற்று பெருமைகள் பற்றி இல்லாமல் உள்ளது. காஷ்மீர் நமது நாட்டின் பண்பாடு கலாச்சாரத்தை எவ்வாறு உயர்த்தியது என்பதை இந்த வரலாற்று கண்காட்சி உணர்த்திடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளில் கண்காட்சி நடத்திட விரும்பினால் அதற்கு வழிவகை செய்து தருகிறோம் என்றார்.
காஷ்மீர் இந்தியாவின் மகுடம் எனும் நூலை வெளியிட அதனை புவியியல் ஆய்வாளர் செல்வ முத்துக்குமார் பெற்றுக்கொண்டார். வரலாற்றுக் கண்காட்சியை பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் உட்பட பலர் கண்டு குறிப்பெடுத்தனர்.
இந்தக் கண்காட்சி தொடர்ந்து மூன்று நாட்கள் நடக்கிறது. கலைமாமணி ஜானகி அம்மாள் இறை வணக்கம் மற்றும் குரு வணக்கம் பாடினார். ரங்கராஜன் நன்றி கூறினார்.