கோவிலுக்குள் குண்டர்களா..? அறநிலையத்துறையே அலட்சியம் வேண்டாம் என்று இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில்….
தமிழகத்தில் கோவில்கள் இந்து சமய அறநிலைத்துறை வசம் இருக்கும் காரணத்தினால் ஆளும் கட்சியாக எந்த கட்சியினர் இருக்கிறார்களோ, அவர்களுக்கு வருமானம் ஈட்டும் தொழிற்சாலையாக கோவில் மாறியுள்ளது.
அதன் அடிப்படையில் ஆளுங் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஆளுங்கட்சி பொறுப்பாளர்களுக்கும் அவர்களுடைய உறவினர்களுக்கும் அவர்களின் அல்லக்கைகளுக்கும் அடிவருடிகளுக்கும் கோவில் சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களை தனது எதேச்சதிகாரத்தை பயன்படுத்தி கொடுக்கின்றனர்.
அந்த ஒப்பந்ததாரர்கள் ஆட்சி இருப்பதற்குள் பெரும் பொருள் சம்பாதித்து விட வேண்டும் என்கின்ற நோக்கத்தில் சரியான முறையில் கோவிலுக்காக எந்த ஒரு நல்ல பணியையும் செய்வதில்லை. மாறாக ஊழல் செய்து கோவிலின் புனிதத்தை கெடுப்பது இது போன்ற சுயநல ஒப்பந்ததாரர்களின் வாடிக்கையாக உள்ளது.
பழனி, திருச்செந்தூர், மதுரை, ராமேஸ்வரம் போன்ற பிரசித்தி பெற்ற மக்கள் அதிகமாக வழிபடக்கூடிய கோவில்களில் ஒப்பந்த பணியாளர்கள் என்கின்ற பெயரில் ரவுடிகளும், குண்டர்களும் வலம் வருகின்றனர். இவர்கள் கோவிலின் உரிமையாளர்கள் போல் செயல்படுகின்றனர்.
வருகின்ற பக்தர்களை மதிப்பது என்பது துளி கூட கிடையாது. மாறாக பக்தர்களை தாக்குவதும், பக்தர்களை தரக்குறைவாக பேசுவதும், பக்தர்களுக்கு இடையூறு செய்வதும் இவர்களின் பிரதான வேலையாக உள்ளது. இதனை அந்த கோவிலை நிர்வாகிக்கும் ஆணையரோ மற்றும் இணை ஆணையர்களோ கண்டு கொள்வதில்லை. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் வாங்கிக்கொண்டு அவர்களின் செயலுக்கு ஜால்ரா தட்டுகின்றனர்.
பழனி திருச்செந்தூர் ஸ்ரீரங்கம் போன்ற கோவில்களில் வரக்கூடிய பக்தர்களை தாக்கும்போது அவர்களுக்கு பக்தி குறைய வாய்ப்புள்ளது. தெய்வத்தின் மீதான நம்பிக்கை குறைய வாய்ப்புள்ளது. திமுக அரசும் இந்து சமய அறநிலையத்துறையும் இதைத்தான் எதிர்பார்க்கிறார்களா.? என்ற கேள்வி பொது மக்களிடம் எழுகிறது.
மேலும் பல கோவில்களில் குற்ற வழக்கு நிலுவையில் உள்ள பணியாளர்கள் பணியாற்றுவது வேதனைக்குரிய விஷயம். தினம்தோறும் பக்தர்களை தாக்குகின்றனர் பல பேர் புகார் கொடுப்பதில்லை கோவிலுக்கு வந்த இடத்தில் தனக்கு இப்படி ஒரு அவமானம் நேர்ந்தது என்று நொந்து மனம்வெதும்பி செல்கின்றனர்.
இதுவரை இந்த அரசாங்கம் ஒப்பந்ததாரர்களை நேர்மையானவர்களா? ஒழுக்கமானவர்களா? என்று விசாரிக்காமல் ஒப்பந்தங்களை வழங்கி உள்ளது. இது முழுக்க முழுக்க தவறுக்கு துணை போகும் செயலாகும். தமிழகத்திலே அதிக வருமானம் வரக்கூடிய துறையாக இருக்கக்கூடிய இந்து சமய அறநிலைத்துறை கோவில் வருமானத்தை மட்டும் பார்க்கிறதா?
மேலும் இந்த நாட்டின் ஆணிவேராக திகழக்கூடிய கோவிலை அழிக்க துடிக்கிறதா? பெரும்பான்மை மக்களின் பக்தியை மழுங்கடிக்கும் திட்டமா? என்று இந்து முன்னணி கேட்கிறது. உடனடியாக தமிழக அரசு தமிழக முழுவதிலும் உள்ள கோயில்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்காமல் கோவிலுக்காக சேவைமனப்பான்மையோடு பணியாற்றக்கூடிய, பக்தி உள்ள சமுதாய சிந்தனையுள்ள நேர்மையாளர்களாக இருக்கக்கூடிய தெய்வபக்தியும் தேசபக்தியும் நிறைந்த இளைஞர்களை பணியில் அமர்த்த வேண்டும்.
தற்போது இருக்கும் ஒப்பந்தங்களை, ஒப்பந்த பணியாளர்களின் நடவடிக்கைகள் பக்தர்களிடம் நடந்து கொள்ளும் முறை , கடவுள் மீதான நம்பிக்கை உள்ளிட்டவற்றை ஆராய்ந்து அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் ஒப்பந்தம் மற்றும் பணியாளர்களை தொடர்ந்து நீடிக்க அனுமதிக்கலாம்.
இல்லையெனில் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அவர்களில் நேர்மையாளர் , பக்தியாளர், நற்சிந்தனையாளர் எனில் நிரந்தர பணியாளர்களாக கூட மாற்றலாம். இதுபோன்ற கோவில் சம்மந்தமாக நல்ல திட்டங்களை உடனடியாக நிறைவேற்றினால் மட்டுமே இந்துக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை மீது நம்பிக்கை வரும் என்பதை இந்து முன்னணி வலியுறுத்துகிறது…