முதல்வர் ஸ்டாலின் பள்ளிக்கூடம் போனாரா? என தெரியவில்லை. அவர் வரலாறுப் புத்தக்கத்தை நன்றாகப் படிக்க வேண்டும் என தமிழக பாஜக., தலைவர் கே.அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது குறிப்பிட்டார்.
பாஜக., மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை பாஜக., தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குடியுரிமை என்பது பிறப்பு மற்றும் வழித்தோன்றல் ஆகிய 2 தேவைகளைப் பூர்த்தி செய்யும். தமிழகத்தில் வழக்கம் போல அரசியல் கட்சிகள் குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி தெரியாமல் பேசுகிறார்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு ஒரு சதவீதம் கூட பாதிப்பு ஏற்படாது. இஸ்லாமியர்களின் குடியுரிமையை பறிப்பதற்கான சட்டமும் இது இல்லை. குடியுரிமை திருத்தச் சட்டம் யாருக்கும் எதிரானது அல்ல. குடியுரிமை கொடுப்பதற்கான சட்டம் தான் இது. குடியுரிமைகளை எடுப்பதற்கான சட்டம் அல்ல.
தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அனுமதிக்க மாட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். சி.ஏ.ஏ., சட்டத்தை நிறுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?. முதல்வருக்கு எந்தளவு அரசியல் சட்டம் தெரிந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் பள்ளிக்கூடம் போனாரா? எனத் தெரியவில்லை. வரலாற்றுப் புத்தகத்தை அவர் நன்றாகப் படிக்க வேண்டும்.
ஒரு மாநில முதல்வராக எதிர்க்கிறேன் என்றால் சரி. ஆனால் தமிழகத்துக்குள் விட மாட்டேன் என்று சொல்ல அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அந்த அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது.
இலங்கையில் இருந்து வந்தவர்களுக்கு தமிழகத்தில் குடியுரிமை கொடுத்துள்ளனர். 14 ஆண்டுகளாக இந்தியாவில் குடியேறியவர்களுக்கு குடியுரிமை தரப்பட்டுள்ளது. குடியுரிமை வழங்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டும் தான் உள்ளது.
‘குடியுரிமை திருத்தச் சட்டம் யாருக்கு எதிரானது?’ என்பதை தமிழக கட்சிகள் கூற வேண்டும். அகதிகளாக வருபவர்கள் இந்தியாவில் தங்கி இருக்கலாம். அவர்களுடைய நாட்டில் பிரச்னை முடிந்ததும், அவர்கள் அவர்களின் நாட்டுக்கே திருப்பி அனுப்பப்படுவர்…. என்று கூறினார் கே.அண்ணாமலை.
அவரது செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை தெரிவித்த முக்கிய அம்சங்கள்…
- சிஏஏ சட்டம் பற்றி தெரியாமல் பல்வேறு அரசியல் கட்சியினர் பேசி வருகின்றனர்.
- சிங்களத் தமிழர்கள் 11 ஆண்டுகள் இங்கு தங்கி இருந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
- யுத்த காலத்தில் தமிழகம் வந்தவர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டது.
- மக்களை குழப்பி, திசை திருப்பும் வகையில் இந்த விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன.
- குடியுரிமை வழங்குவதற்கான அதிகாரம் மத்திய அரசிற்கு மட்டுமே உள்ளது.
- 2019-ம் ஆண்டுக்கு பிறகு 1,414 பேருக்கு குடியுரிமை வழங்கியுள்ளோம்.
- அரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், டெல்லி உள்ளிட்ட 9 மாநிலங்களில் 31 மாவட்டங்களில் சிஏஏ அமல்படுத்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
- சிஏஏ சட்டம் யாருக்கும் எதிரானது கிடையாது.
- இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் உள்பட யாருடைய குடியுரிமையையும் பறிக்க முடியாது.
- 4 லட்சத்து 5 ஆயிரம் பேர் அகதிகளாக இந்தியாவில் உள்ளனர்.
- சட்டத்தில் என்ன தவறு, குளறுபடி உள்ளது என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
- சமத்துவ மக்கள் கட்சியை கூட்டாக பா.ஜ.க.வில் இணைத்துள்ளார், மோடி குடும்பம் பெரிதாகி உள்ளது.
- இலங்கையில் இருந்து வந்த அனைத்து அகதிகளுக்கும் சட்டத்திற்குட்பட்டு குடியுரிமை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் கருத்து
குடியுரிமை திருத்தச் சட்டத்தால் யாருக்கு என்ன பாதிப்பு என்பது குறித்து தெரிந்துகொள்ள முதலில் தயவு செய்து அந்தச் சட்டம் குறித்து நன்றாகப் படியுங்கள் என்று, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
இது குறித்து அவர் கூறியபோது
குடியுரிமை திருத்தச் சட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்தால் யாருக்கு என்ன பாதிப்பு என்பது குறித்து, முதலில் தயவு செய்து படியுங்கள். குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து நடிகர் விஜய் உள்ளிட்ட அனைவரும் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தில் மிகத் தெளிவாக, அதாவது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில், சிறுபான்மையினராக இருந்து, அங்கு அவர்களால் வாழ முடியாத சூழல் ஏற்படும் போது, இந்தியாவிற்கு வந்து அடைக்கலம் புகுந்து, 2014ஆம் ஆண்டிற்கு முன்பில் இருந்து இந்தியாவில் இருப்பவர்களுக்கு குடியுரிமை கொடுக்கிறோம். இதனால், வெளிநாட்டு இந்து, கிறிஸ்தவர் உட்பட பலரும் நலன் அடைகிறார்கள் என்றார் முருகன்.