வள்ளலார் சர்வதேச மையம் பொதுமக்களின் போராட்டத்தில் பிரிவினைவாத நக்சலைட்டுகள் நுழைய வாய்ப்பு. தமிழக அரசு விழிப்புடன் செயல்பட வேண்டும்.. கட்டுமானத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.. என்று, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
வடலூர் அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் பெருமானார் இராமலிங்க சுவாமிகள் திருப்பாதம் பட்ட புனித இடம் சத்திய ஞான சபை பெருவெளி ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் வள்ளலார் இறைவனுடன் ஜோதி வடிவாக ஐக்கியமான தைப்பூச தினத்தில் ஜோதி தரிசன அருட்காட்சியை காண பல லட்சம் பக்தர்கள் வருகின்றனர். அந்த பக்தர்களுக்கு வள்ளலாரின் விருப்படி நூற்றாண்டுகளாக அன்னதானம் வழங்குவது
தமிழகத்திற்கு எடுத்துக்காட்டான பெருமை சேர்க்கும் விஷயமாகும்.
இந்நிலையில் சத்திய ஞான சபைக்கு அருகில் வள்ளலார் ஆன்மீக சேவைக்கு பக்தர்கள் காணிக்கையாக அளித்த சுமார் நூறு ஏக்கர் கொண்ட இடத்தில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தமிழக அரசு அறிவித்தது.
வள்ளலாரின் நோக்கத்திற்கு எதிராக,
வள்ளலாரின் பெருவழி தத்துவத்திற்கு எதிராக
தமிழக அரசின் இந்த அறிவிப்பிற்கு ஆரம்பம் முதலே இந்து முன்னணி கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது. தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய மக்களிடம் பக்தர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி
போராட்டமும்
நடத்தியது.
மேலும் தமிழக அரசு திட்டமிட்டுள்ள வள்ளலார் சர்வதேச மையம் அரசின் இடத்தில் அமைய வேண்டும். அதில் வள்ளல் பெருமகனார் வாழ்வில் ஆரம்பம் முதல் இறுதி வரை நிகழ்ந்த ஆன்மீக அற்புதங்களை முதன்மை படுத்த வேண்டும். திமுகவின் கொள்கைகளை எந்த வகையிலும் மறைமுகமாகக் கூட திணித்து வள்ளலாரின் பெருமைக்கு இழுக்கு ஏற்படுத்த முனைந்தால் இந்து முன்னணி கடுமையாக எதிர்க்கும்.
நேற்று வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தோண்டப்பட்ட குழிகளில் இறங்கி கிராம மக்கள் ஜனநாயக வழியில் தன்னெழுச்சியாக போராடி உள்ளனர். மக்களின் விருப்பத்திற்கு இந்து முன்னணி ஆதரவை தெரிவிக்கிறது.
ஜனநாயக வழியில் போராட்டம் நடத்துபவர்களை அதிகாரத்தை கொண்டு மிரட்டி பார்ப்பதைவிட
வள்ளலார் பக்தர்களின் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை அரசு உணரவேண்டும்.
அதே வேளையில் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி தேர்தல் காலம் என்பதால் அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தும் நோக்கில் கம்யூனிஸ்ட் நக்சலைட் போன்ற பிரிவினைவாத அமைப்புகள் பொதுமக்களிடைய ஊடுருவி தன்னெழுச்சியாக அமைதியாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை வன்முறை காலமாக மாற்றியது போல் இங்கும் வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.
எனவே தமிழக அரசு விழிப்புடன் நடந்து கொண்டு தமிழக அரசு வள்ளலார் பக்தர்களின் விருப்பத்திற்கு இணங்க சத்திய ஞான சபை பெருவெளியில் திட்டமிட்ட கட்டட கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும். மக்கள் விருப்பத்திற்கு எதிராக சர்வாதிகாரியாக செயல்படுவதை திமுக ஆட்சியாளர்கள் கைவிட இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.