சென்னை:
பில்டப் கொடுப்பவர்கள் நீண்ட நாள் நிலைக்கமுடியாது என்று டிடிவி தினகரனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அறிவுரை கூறியுள்ளார்.
சென்னை சாந்தோமில் செய்தியாளர்களிடம் பேசினார் அமைச்சர் ஜெயக்குமார். அவரிடம் கே.சி.பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்தும், டிடிவி தினகரன் கட்சியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகியது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், கொள்கை முடிவுகளை ஒரு தனிநபர், தன்னிச்சையாக அறிவிக்க முடியாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கொள்கை அளவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சி விவகாரங்கள் குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். கொள்கை முடிவுகளை தனிநபர் எடுக்க முடியாது. கொள்கை முடிவுகளை மீறியதால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்பது தொடர்பான விவகாரத்தில் கட்சித் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். அதிமுக., என்பது கட்டுக் கோப்பான கட்சி. முன்னர் ஜெயலலிதா அப்படித்தான் கட்சியை வைத்திருந்தார். இப்போதும் கட்சி கட்டுக்கோப்புடன் செயல்படுகிறது. கே.சி.பழனிசாமி உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்” என்று கூறினார்.
தொடர்ந்து, டிடிவி தினகரன் குறித்து கூறிய அவர், பில்டப் கொடுப்பவர்கள் நீண்ட நாள் நிலைக்க முடியாது. நெல்லிக்காய் சிதறுவது போல் தினகரன் அணி சிதறிவிடும். அதைத்தான் நாஞ்சில் சம்பத் விலகல் உணர்த்துகிறது. கட் அவுட்டை ஜெயலலிதாவுக்கு நிகராக அவர் வைத்துக் கொள்ளும் அளவுக்கு அவர் தகுதி அற்றவர். இதை யாரும் மன்னிக்க முடியாது. அவருக்கு தகுதி கொஞ்சமாவது இருக்கிறதா என்பதை அவர் உணர வேண்டும். தனக்குத் தானே அழகு பார்த்தவர்;
விளம்பரத்தால் ஒருவர் உயர முடியாது என்று கூறினார் ஜெயக்குமார்.