சென்னை: அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு 5 மாநிலங்களைக் கடந்து தமிழகத்துக்குள் வந்த ராமராஜ்ய ரத யாத்திரையை தமிழகத்துக்குள் அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி இன்று செங்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபடச் சென்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவரான ஜவாஹிருல்லா தென்காசியில் போலீஸாரால் கைது செய்யப் பட்டார். மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜவாஹிருல்லா கைது செய்யப் பட்டதைக் கண்டித்தும், ராமராஜ்ய ரத யாத்திரையை தமிழகத்துக்குள் அனுமதித்ததைக் கண்டித்தும் இஸ்லாமிய அமைப்புகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
காலை 9 மணி அளவில் ரத யாத்திரைக்கு எதிராக மறியலுக்குச் சென்ற ஜவாஹிருல்லா கைது செய்யப் பட்டதைக் கண்டித்து காலை 10.30 மணிக்கு அண்ணா சாலையில் எழும்பூர் செல்லும் சாலை பிரிவில் குவிந்து சாலை மறியலில் ஈடுபட்டனர் இஸ்லாமிய அமைப்பினர். இந்நிலையில், விஸ்வரூபம் சர்ச்சையில் அண்ணா சாலையில் ஏற்பட்ட பதற்றம் நினைவுக்கு வர, விஸ்வரூபம் 2 குறித்து பேசிவரும் கமல்ஹாசன், தனது டிவிட்டர் பதிவில், இப்படி யாருக்கோ சாமரம் வீசியுள்ளார்.
அவரது டிவிட்டரில்,
சமூக நல்லிணக்கத்திற்காக எழும் நியாயமான குரல்களுக்கு 144 தடை உத்திரவு, கைது. அரசியல் நோக்கத்துடன் மக்களைப் பிளவுபடுத்தும் ஊர்வலத்திற்கு அனுமதி. மக்கள் மனதைப் பிரதிபலிக்காமல், மாநிலமெங்கும் தேர்வு எழுதக்காத்திருக்கும் மாணவர்களையும் மதியாமல் யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு. – என்று கூறியுள்ளது, இப்போது விளக்கவுரைகளுக்காக சமூக வலத் தளங்களில் பேசப்பட்டு வருகிறது.
சமூக நல்லிணக்கத்திற்காக எழும் நியாயமான குரல்களுக்கு 144 தடை உத்திரவு, கைது. அரசியல் நோக்கத்துடன் மக்களைப் பிளவுபடுத்தும் ஊர்வலத்திற்கு அனுமதி. மக்கள் மனதைப் பிரதிபலிக்காமல், மாநிலமெங்கும் தேர்வு எழுதக்காத்திருக்கும் மாணவர்களையும் மதியாமல் யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு.
— Kamal Haasan (@ikamalhaasan) March 20, 2018