சாமி இருக்க வேண்டிய கோயில் இடத்தில் ஆக்கிரமிப்பின் காரணமாக ஆசாமிகள் இருக்கிறார்கள் – தஞ்சை பெரிய கோவில் இருக்கும் புகழ் மிக்க தஞ்சாவூரில் தான் இந்த கொடுமை.
அறநிலையத்துறை, காசுக்கு மட்டுமே கணக்கு பார்த்து, வருமானம் வரும் கோயில்களை மட்டுமே கவனத்தில் கொள்வதால், வருவாய் குறைந்த கோயில்கள் பராமரிப்பு இன்றி பாழ்பட்டுக் கிடக்கின்றன. அவற்றில் சமூக விரோதிகள் குடியேறுகிறார்கள். ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் வீடுகளை அமைத்துக் கொண்டு, அங்கேயே வாழ்ந்தும் வருகிறார்கள்.
இப்படிப்பட்ட துர்பாக்கிய நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திலும் சில சிவ ஆலயங்கள் உள்ளன. ஆனால் இதே போன்றதொரு நிலைமை, தஞ்சை மாவட்டத்திலும், அதுவும் குறிப்பாக தஞ்சாவூரிலேயே இருப்பது மிகவும் கொடூரமானது. இது குறித்து இந்து மக்கள் கட்சியின் பொதுச் செயலர் ராம.ரவிக்குமார் நம்மிடம் விவரித்தவை…
இந்து சமய அறநிலையத் துறையின் அலட்சியத்தால், ஆக்கிரமிப்பாளர்களின் அபகரிக்கும் நோக்கத்தால், கையெடுத்து வணங்க கூடிய தெய்வங்கள் வாழ்ந்த இந்து திருக்கோயில் இன்று ஆக்கிரமிப்பு பேர்வழிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு கோயிலையே கொள்ளையடித்து குடும்பம் நடத்தும் வீடாக மாற்றிய கொடுமையை என்னவென்று சொல்வது?
தஞ்சை மாநகரம் தெற்கு அலங்கம் தொப்புள் பிள்ளையார் கோவில் தெருவில் உயர்ந்து நின்ற கோபுரம் குட்டிச்சுவர் ஆகவும், லையம்சம் பொருந்திய சிற்ப வேலைப்பாடுகள் எல்லாம் சிதில மடைந்தும் இந்த சமூக விரோதிகளால் மறைக்கப்படும் சிதைக்கப்பட்டும் இருக்கிறது.
துவார பாலகர்கள் என்று சொல்லக்கூடிய வாயிற்காவலர்கள் கோயிலுக்கு முன்பாக தான் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த ஆக்கிரமித்த பேர்வழியின் வீட்டின் பாதுகாப்புக்கு வாட்ச்மேன் தேவையில்லை. ஏனென்று சொன்னால் கோயிலிலேயே பாதுகாத்த துவார பாலகர்கள் இன்று இவருடைய வீட்டிற்கும் வாயிற்காவலன் ஆக இருக்கிறார்.
பிள்ளையார் ,சந்திரன் சூரியன் போன்ற கலையம்சம் பொருந்திய கற்சிற்பங்கள் எல்லாம் கண் முன் அழிந்து கொண்டிருக்கும் கொடுமை! இதனைக் கண்டுகொள்ளாத அறநிலையத்துறையை நினைத்தால் ஏழு ஜென்மத்துக்கும் திருந்துவார்களா என்று தெரியவில்லை.
மன்னர்கள் கட்டிய கோயிலை நம்மவர்கள் ஆக்கிரமித்து அனுபவிக்க நினைப்பது பாவத்திலும் பெரிய பாவம். இந்தப் பாவிகளுக்கு தெரியவில்லை.
நாங்கள் இந்தப் பகுதிக்கு சென்று விசாரித்தோம். ஆக்கிரமிப்பு பேர்வழிகள் சொன்னதைக் கேட்டால் எங்களுக்கு மயக்கமே வந்தது. இது எங்களுடைய வீடு. வீட்டை நாங்கள் கோயில் மாடலில் கட்டி இருக்கிறோம் என்று, அரிச்சந்திரனுக்கு அடுத்த வீட்டுக்காரர் போல உண்மை பேசுகிறார்கள்.
கோயிலையே ஆக்கிரமித்து கட்டி இருக்கக்கூடிய இந்த வீட்டிற்கு மின்சாரத்துறை எப்படி மின்சாரம் வழங்கியது என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். இவ்வளவு பெரிய கோவில் காணாமல் போய் கண்டுகொள்ளாத அறநிலைய துறையை என்ன செய்வது?
இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக இங்கே குறிப்பிட்ட இந்த திருக்கோயிலை தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு மீண்டும் வழிபாட்டுக்குரிய இந்து சமய திருக்கோயிலாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் .
மேலும் மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை, வருவாய்த்துறை அனைவரும் இந்தத் திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள் எங்கெல்லாம் இருக்கிறது? யாருடைய ஆக்கிரமிப்பில் இருக்கிறது என்பது குறித்தான முழு விசாரணை மேற்கொண்டு இந்தக் கோயிலையும் கோயில் சொத்துக்களை மீட்பதற்கு உடனடியாக துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் என இந்து மக்கள் கட்சி தமிழகத்தின் சார்பில் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.
இல்லாவிட்டால் அன்பர்களைத் திரட்டி நம் திருக்கோவிலை மீட்கும் புனிதப் பணியை மேற்கொள்வோம். இதற்காக இந்து மக்கள் கட்சி, நீதிமன்றத்திலும் போராடும்! இதனை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும் தமிழக அரசுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம் .
கோயிலே காணாமல் போகும்போது கண்டு கொள்ளாத அறநிலைய துறை அதிகாரிகளா, கோயில்கள் சுவாமி சிலைகளைப் பாதுகாக்கப் போகிறார்கள்? என்றார் டீக்கடையில் பேசிக்கொண்டிருந்த நபர் – என்றார் ராம. ரவிக்குமார்!
அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா?! அல்லது அன்பர்கள் துறைதான் களத்தில் இறங்க வேண்டுமா?!