கேள்வி: பிரியங்காவின் அரசியல் வருகையை எப்படிப் பார்க்கிறீர்கள்!?
பதில்: படம் ஓடாது; வாங்க மாட்டோம் என்று விநியோகஸ்தர்கள் பிடிவாதம் பிடித்தால், கடைசி நேரத்தில் ஒரு ஐட்டம் டான்ஸ் படத்தில் சேர்க்கப்படும்.
2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக உ.பி.யில் தேர்தல் பிரசாரத்துக்கு காங்கிரஸ் கட்சி கடைசியில் பிரியங்கா வதேராவை களமிறக்கி விட்டுள்ளது. இதுவரையிலும் தனது அன்னைக்காகவும் சகோதரனுக்காகவும் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் பிரசாரம் செய்து வந்த பிரியங்கா வதேரா இப்போது உபியில் ஒரு மண்டலத்தின் பொதுச் செயலராகியிருக்கிறார்.
பிரியங்காவின் பிரசாரத்தினால் உபி.,யில் ஓட்டுக்களைப் பெற முடியும் என்று காங்கிரஸ் நினைத்திருக்கிறது. காரணம், அண்மையில் நடைபெற்ற மாநிலத் தேர்தல்களில், காங்கிரஸ் எதிர்பார்த்தது போன்ற தேர்தல் ரிசல்ட் கிடைக்கவில்லை. கர்நாடகத்தில் முறைகேடாகவே ஆட்சியை கூட்டணி போட்டு பெற முடிந்தது. ராஜஸ்தானில் ஜாதி அரசியல் செய்து கைப்பற்றியபோதும், மாநில அளவுக்கான முடிவுகளாகவே அது அமைந்தது. மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைப் பெற்ற போதும், பகிரங்கமாக கமல்நாத் இஸ்லாமியர்களிடம் பேரம் பேசியும், பெற்ற வாக்குகள் சதவீதமும் ஓட்டு வித்தியாசமும் காங்கிரஸை கவலை கொள்ளவே செய்திருக்கிறது.
இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ராகுலை நம்பி பலனில்லை என்று கருதி, பிரியங்கா வதேராவை களம் இறக்கியுள்ளது காங்கிரஸ். தேறாத கட்சிக்கு தேறுதல் தருவார் என்ற நப்பாசையில் கடைசிக் கட்டத்தில் ஓடாத சினிமாவில் முந்தைய நாள் சேர்க்கப்படும் ஐட்டம் டான்ஸ் என்று இதனை விமர்சித்திருக்கிறது நெல்லை ஜெபமணி குழு!