சண்டிகர்: காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டது மிகவும் கோழைத்தனமான கண்டிக்கத்தக்க செயல். ஆனால் அதற்காக பாகிஸ்தான் முழுவதையும் பழிசொல்வது சரியா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் பஞ்சாப் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும் தற்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு நெருங்கிய நண்பரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து!
ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு வியாழக்கிழமை நேற்று மாலை 3 மணிக்கு புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவப் படையினர் பேருந்தில் சென்றனர். அப்போது, அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து சென்றபோது, அதன் மீது பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மத் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படை பயங்கரவாதி 350 கிலோ வெடிபொருட்களுடன் வெடிக்கச் செய்தார்.
இந்தத் தாக்குதலில் பேருந்தில் பயணம் செய்த 40க்கும் மேற்பட சிஆர்பிஎப் வீரர்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். படுகாயமடைந்த 38 சிஆர்பிஎப் வீரர்கள், பாதாமிபாக் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்தத் தாக்குதலுக்கு நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.! அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தங்களிலும், ஊடகங்களில் பேசும் பொதுமக்களும் வலியுறுத்துகின்றனர்.
இந்நிலையில், பஞ்சாப் மாநில அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து, புல்வாமா தாக்குதல் குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,
புல்வாமாவில நமது ராணுவத்தினர் மீது பயங்கரவாதி நடத்திய தாக்குதல் கோழைத்தனமானது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். வன்முறை கண்டிக்கத்தக்கது, அதில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
பாகிஸ்தானில் உள்ள ஒரு பயங்கரவாதக் குழு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. ஆனால் குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலுக்காக ஒட்டுமொத்த பாகிஸ்தான் நாட்டையும், மக்களையும் நாம் பழி சுமத்தலாமா? என்று கேள்வி எழுப்பினார்.
இது இப்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்த ஒரு அமைப்பும், அந்த ஒரு அமைப்பைச் சேர்ந்த ஒரு நபரும் நம் நாட்டில் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு தேடப்படுபவர், நாட்டில் பல்வேறு தாக்குதல்களை நடத்தியவர், அப்படி எனில், அந்த ஒரு நாடு, அந்த ஒரு நபரை மட்டும் நம் நாட்டிடம் ஒப்படைத்துவிட்டு, நாங்கள் உங்கள் நாட்டுக்கு எதிராக எவரையும் எங்கள் மண்ணில் இருந்து கொண்டு செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்று கூறலாமல்லவா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
முன்னதாக, பாகிஸ்தான் பிரதமராக தேர்வு செய்யப் பட்ட தன் நண்பர் இம்ரான் கானின் பதவி ஏற்புக்கு தாமாகச் சென்று வாழ்த்து தெரிவித்து, அந்நாட்டின் ராணுவத் தளபதியைக் கட்டியணைத்துக் கொண்டார்! இது அப்போது நம் நாட்டில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்நிலையில் மீண்டும் தம் நண்பர் இம்ரான் கானுக்காக, சித்து இவ்வாறு கூறியிருக்கிறார்