விஷயம் இதுதான்… கீழடி குறித்த ஒரு கட்டுரை இதழ் ஒன்றில் நேற்று வெளியானது. இந்தக் கட்டுரை, பாண்டியராஜன் சார்ந்த துறையை, பணியாளர்களை கேவலப்படுத்தும் வகையில் இருந்தது. ஆனால் அதனை பாண்டியராஜன் லைக் செய்து உற்சாகப் படுத்தியிருக்கிறார் என்பதுதான் பின்னணி.
இது குறித்து பூமிப் பரப்பியல், நிலவியல் துறைகளில் வல்லுநரான பெரியார் பல்கலை., பேராசிரியர் ஒருவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட உள்ளக் குமுறல் இவை..
கீழடி குறித்து அரைத்த மாவை அரைப்பது போல், மீண்டும் மீண்டும் ஒரே செய்தியையே வைத்து ஒரு கட்டுரை நேற்றைய தினத்தந்தியில் வெளியானது! இதை அப்படியே விட்டுவிட்டு, நாமும் கடந்து போய்விடலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், தினத் தந்தி இன்றளவும் பாமரர்களைச் சென்று சேரக்கூடிய வெகுஜன பத்திரிக்கை என்பதாலும், தவறான மற்றும் சில விஷமக் கருத்துக்களை அக்கட்டுரை வெளிப்படுத்துவதாலும், எதிர்வினை ஆற்றுவது தவிர்க்க முடியாதது என்பதால், இணையத்தின் மூலமாவது எங்கள் உள்ளக் குமுறலை வெளிப்படுத்துவது கடமை என்று தோன்றியது.
இந்தக் கட்டுரையாளர் எட்டுக்காலம் அளவுக்கு நீட்டி முழங்கியிருந்தாலும், அதில் உள்ளடங்கிய செய்திகளில், கட்டுரையாளரின் கருத்தாக கீழ்க்காணும் நாலே நாலு வரியில் அடங்கும் விஷயம் மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது.
- தமிழக அரசின் தொல்லியல்துறை அலுவலர்கள் எல்லோரும் கல்வெட்டை மட்டுமே படிக்கத் தகுதியானவர்கள், தொல்லியல் அகழாய்வு நடத்த தகுதியும், திறனும் பெற்றவர்கள் அல்லர்.
இது அரசின் மீதான, அரசு அலுவலர்களின் மீதான, அரசின் திட்டங்களை செயல்படுத்தும் உயரதிகாரியிலிருந்து, கீழ்மட்ட கள உதவியாளர் வரையிலான ஆய்வாளர்களைப் பழிக்கும் செய்தியே!
2.மத்திய அரசின் தொல்லியல் துறை மட்டுமே தொழில்நுட்பரீதியாக அகழாய்வு நடத்த தகுதி பெற்றது.
இதுவும் போகிறபோக்கில் தெரிவித்து விட்டு போய்க்கொண்டே இருக்கும் முட்டாள் தனமான கருத்து. கட்டுரையாளர் மத்திய அரசின் எந்தெந்தத் துறைகளை அறிவியல், தொழில்நுட்ப ரீதியாக பரிசோதித்து, இந்த முடிவுக்கு வந்தார் என்பது, அவரது கற்பனைக் குதிரைக்கே வெளிச்சம்.
அடுத்ததாக, தமிழகத்தில், மத்திய அரசின் தொல்லியல் துறையைவிட, அதிக தொழில்நுட்பம் தெரிந்த ஆய்வாளர்கள், பல கல்வி நிலையங்களில் இருக்கிறார்கள். மத்திய, மாநில அரசுத் துறைகளும், உயர் நீதிமன்றமும், இவர்களின் சேவைகளைத் தான் முக்கியமான தொல்லியல் ஆய்வுகளுக்கு பயன்படுத்திக்கொள்கின்றன.
எனவே, வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று போகிற போக்கில் உளறிக் கொட்டுவது முட்டாள்தனமானது; இதைத் தவிர்ப்பது நல்லது. இத்தகைய கருத்துகளைத் தாங்கிய ஒன்றை ஓர் அறிவுஜீவித்தனமான கட்டுரை என்று பிரசுரிப்பது, அதைவிட முட்டாள்தனமானது.
இதுதான், இந்தக் கட்டுரையாளர் தெரிந்தோ, தெரியாமலோ, சொன்ன ஒரே ஒரு நல்ல விஷயம். மொத்தக் கட்டுரையிலும், இது ஒன்று மட்டுமே பிரசுரிக்கத் தகுந்ததாய் உள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக, கீழடி மட்டுமே அல்ல, சிலைமானிலிருந்து வைகை நதியின் கிழக்கிலான வடிநிலப் பகுதி, தென்கிழக்கிலான சக்குடி, பசியாபுரம், லாடனேந்தல், அக்ராஹாரம், கொந்தகை உள்ளிட்ட பகுதிகளும் பழந்தமிழரின் வசிப்பிடங்கள், தொழிற்சாலைகள், வணிக மையங்கள், வழிபாட்டுத் தலங்கள், சேமிப்பு மையங்கள், இரும்பு உருக்கு ஆலைகள், குறைந்தது மூன்று விதமான நீத்தார் புதைவிடங்கள் போன்ற பலவிதமான பயன்பாட்டுத்தலங்கள் இருந்த இடங்கள் மட்டுமல்லாது, வேட்டையாடி வாழ்ந்த நுண்கற்கால மனிதனின் வாழிடமாகவும் வைகை சமவெளி நாகரிகம் இருந்திருக்கிறது என்பதில் (எமது ஆய்வுக்குழுவுக்கு) எந்தவித ஐயமும் இல்லை.
எனவே இந்தப் பகுதிகள் அனைத்தும், முறையான, அறிவியற் பூர்வமான, வாட்சப், பேஸ்புக் உள்ளிட்ட சமூகத்தள பார்வர்டர்களைப் போல், அரைத்தமாவை அரைக்கும் அரைவேக்காட்டு அறிவாளிகள் போல் அல்லாமல், தக்க துறை அனுபவம் உள்ளவர்களால் எந்தவித இடர்ப்பாடும், அழுத்தமும் இன்றி ஆய்வு செய்யப்பட வேண்டும். நடக்குமா? நடக்க விட்டு விடுவோமா? என்று தமிழன் கூக்குரல்கள் ஒட்டுமொத்தமாய் எதிரொலிக்குமே!
- கீழடியில் இரண்டரை மீட்டர் ஆழத்தில் கிடைத்த பொருட்களை கரிம கதிரியக்க பகுப்பாய்வு மூலம் வயது நிர்ணயம் செய்த போது, அவை சுமார் 2300 -2750 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று தெரியவந்துள்ளது.
இங்கு உள்ள பொருட்களில் பல்வேறுபட்ட நபர்களின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. மத்திய அரசின் துறை அசோகர் கால கல்வெட்டே இந்தியாவில் கிடைத்துள்ள கல்வெட்டுகளில் மிகப் பழமையானது என்று அறுதி செய்துள்ளது. அசோகரின் காலம் கி.மு. மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டு என்று கருதப்படுகிறது.
எனவே, கீழடியிலும் கலிங்கத்துப் பகுதியில் இருந்தவரைப் போலவே, எழுத படிக்கத் தெரிந்தவர்கள் சம காலத்தில் இருந்துள்ளனர் என்ற கருத்தை சித்தாந்த ரீதியாக வேறுபாடு இல்லாமல், மத்திய அரசு வெளிப்படுத்த வேண்டும்.
- இந்தக் கட்டுரையில், எங்கே இருந்து இவர் எங்கே தாவுகிறார் பாருங்கள். அதுவும், எந்தவித ஆதாரமும் இல்லாமல், கொஞ்சம்கூட கூசாமல் ஒரு பழியை மத்திய அரசின் மீது சுமத்துகிறார்!
இப்படி ஒரு அரைவேக்காட்டுத் தனமான, கற்பனை சார்ந்த அனுமானங்களை அறிவியல் நுணுக்கங்களாக பதிய வைப்பது மிகவும் கொடூரமானது.
இன்றைய செய்தி, நாளைய வரலாறு என்று, திராவிட இயக்கத்தின் போர் வாள்கள், ஆதாரமற்ற நாளைய வரலாற்றை உருவாக்கி வைக்கிறார்கள். ஆனால், முந்தைய வரலாற்று நிகழ்வுகளை இன்றைய கற்பனைகளுடன் கலந்து வசதிக்கேற்ப வளைத்துக் கொள்வது, மிகவும் கொடூரமானது. இதையே, வரலாற்று ஆதாரம் என்று தூக்கிக் கொண்டு கம்பு சுத்துவார்கள் அறிவாளித் தமிழர்கள்! அதற்குத்தான் இந்தக் கட்டுரைகள் மூலம் சதி செய்கிறார்கள்!
தமிழ், தமிழர், பழந் தமிழர் நாகரிகம், எல்லாவற்றிலும் ஆர்வம் இருக்க வேண்டியது தான்! பற்று இருக்கவேண்டியதுதான்! அதற்காக, அங்கே இங்கே படித்த பத்திரிக்கை செய்திகளைக் கோத்து, அதையும் முழுதாகத் தெரிந்து கொள்ளாமல், நுனிப் புல் மேய்வது போல், எடுத்துக் கொண்டு குழப்பி, சம்பந்தமே இல்லாமல், வரலாற்று ஆய்வு நடைமுறைகள் எப்படி நடக்கின்றன என்பதை சிறிதளவும் தெரிந்து கொள்ளாமல், நாவலாசிரியர் தனமாக எழுதுவதும், அதையே மெத்தப் படித்த அறிவாளித் தனம் என்று இதழ்கள் பிரசுரிப்பதும்… தெளிவாகச் சொல்லப் போனால்… இவர்களுக்கு கொஞ்சம் மொத்தமான தோல் வேண்டும்… என்று வெளிப்படுத்துகிறார் இந்தப் பின்னணியை!
இந்தக் கட்டுரையைத்தான் ஒருவர் சிலாகித்து, கீழடி என்று பெயர் வந்து விட்டாலே ஏதோ உணர்ச்சிப் பெருக்கில் உள்ளம் சிலாகிப்பது போல் எண்ணுவதும், அதன் உள்நோக்கமோ, உள்ளடக்கமோ தெரியாமல் விருப்பம் தெரிவித்து உற்சாகமூட்டுவதும் ஒரு துறையின் அமைச்சருக்கு அழகல்ல என்பதைத்தான் இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்துகிறது!