அன்பார்ந்த பக்தர்களே, இன்று நவராத்திரியில் அஷ்டமி எட்டாவது தினம். மிக முக்கியமான தினம். அன்னை துர்க்கையின் அருளை மேலும் பெருக்கிக் கொள்வதற்கு இன்று நாம் கூடியுள்ளோம்.
இந்த நன்னாளில் நாம் அன்னை துர்கா தேவியிடம் சில வரங்களை வேண்டுவோம். அன்னை நிச்சயமாக அதை நிறைவேற்றுவார்.
தாயே துர்கா தேவியே, எங்களை எப்போதும் நல்ல வழியில் நடத்திச் செல்லம்மா.
தீமைகள் இல்லாத, துரோகங்கள் இல்லாத, நோய்கள் இல்லாத, சோம்பல் அற்ற, தன்னம்பிக்கையும் தெய்வ நம்பிக்கையும் கொண்ட வாழ்க்கையை எங்களுக்கு வழங்கு தாயே!
துர்க்கை அம்மா, எங்களது உற்றார் உறவினர் சொந்த பந்தம் எல்லோரும் ஆனந்தமாக இருப்பதற்கு அருள்வாய்!
தேவி ஆதிபராசக்தியே, எல்லா உயிர்களும் வாழ்வதற்கேற்ற நல்ல உணவும் நல்ல உணர்வும் கொண்டவர்களாக அவர்களை வைத்திரு தாயே.
ஜெய ஜெய துர்கா தேவி,
தைரியம், சுறுசுறுப்பு,
தன்னம்பிக்கை,
நற்சிந்தனை,
தாராளமனப்பான்மை,
உடல் நலம், நீள்ஆயுள்,
நற்செயல், ஆற்றல் தந்து
மனங்களில் மகிஷாசுரன் குடிபுகாதவாறு செய் தாயே.
இந்த கொரோனா காலத்தில் உலக மக்கள் மிகவும் சிரமப்பட்டு சிரமப்படுகிறார்கள். உங்களது பிள்ளைகளான எங்கள் மீது இரக்கம் கொண்டு கரோனா வைரஸ் என்ற நவீன மகிஷாசுரனை ஒழித்திடும்மா என்று நாங்கள் வேண்டிக் கொள்கிறோம்.
எங்கள் நாடு செல்வச் செழிப்புடன் விளங்க வேண்டும்.
எல்லோருக்கும் சம உரிமை வழங்கப்பட்டு எங்கள் நாடு மேலும் சிறப்படைய வேண்டும்.
எல்லாரும் எல்லாமும் பெற அருள்வாய். இல்லாமை இல்லாத நிலை தந்தருள்வாய் தாயே.
உலக மக்கள் மனதில்
ஒற்றுமை நிலவ
அமைதி பரவ
மனித நேயம் மலர
ஒருவர்க்கு ஒருவர் உதவும் எண்ணம் வளர
உலகத்தின் நாயகியே
லோகாம்பிகையே
ஜகன்மாதாவே
அருள்வாய்!
- ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்