கொரோனா பாதிப்பைத் தடுக்க பலகட்ட நடவடிக்கை தேவை என்று தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன், பல்வேறு நடவடிக்கைகளைப் பட்டியலிட்டு அவற்றை எடுக்கவில்லை என்றால் மீண்டும் ஒரு பெருந்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார்
PIC எனப்படும் புனே இன்டர்நேஷனல் சென்டர் சார்பில் பேரிடர் தயார்நிலை குறித்து நடத்தப்படும் மாநாடு மகாராஷ்டிராவின் புனே நகரில் நேற்று தொடங்குகியது.
மொத்தம் 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் அனைத்து வகையான பேரிடர்களையும் எதிர்கொள்ள ஒரு நாடு எப்படி தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
நேற்று தொடங்கிய இந்த மாநாட்டில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளர் டாக்டர் சௌமியா சுவாமிநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு ‘பேரிடர்கள் மற்றும் தொற்றுநோய்களின் யுகத்தில் தேசியப் பாதுகாப்பு தயார்நிலை’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பில் பேரழிவுகள் மற்றும் தொற்றுநோய்களின் தாக்கம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
காணொலி மூலம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளர் டாக்டர் சௌமியா சுவாமிநாதன், “ஒரு நேரத்தில் ஒரு குறிப்பிட்ட நகரில் மட்டும் கவனம் செலுத்துவதன் மூலம் கொரோனா பாதிப்பைத் தடுக்க முடியாது. அனைத்து பகுதிகளிலும் அங்குள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
ஆய்வக நெட்வொர்க்குகள் தேவை
இதற்கான நிதி, தேவையான உட்கட்டமைப்பு மற்றும் கருவிகள் ஆகியவையும் தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த தேவை. அதேபோல சமூகத்தின் ஈடுபாடு இருந்தால் மட்டுமே வைரஸ் பாதிப்பைக் கட்டுக்குள் வைக்க முடியும்.
மேலும், நமக்குப் பிராந்திய அளவில் மட்டுமின்றி அனைத்து ஊர்களிலும் முறையான ஆய்வக நெட்வொர்க்குகள் தேவை. அனைத்து மட்டங்களிலும் பணியாளர்களின் பயிற்சி மற்றும் திறனை வளர்ப்பது மிக மிக அவசியம்.
குறிப்பாக, ஆரம்பச் சுகாதாரத்தில் நமக்கு அதிக அளவில் முதலீடு தேவைப்படுகிறது. கொரோனாவால் நாம் மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளோம். ஆனால், இப்போது கூட நாம் சர்வதேச அளவில் நோயறிதலுக்கு முன்னுரிமை அளிப்பதில்லை.
உரிய நேரத்தில் தேவையான நடவடிக்கைகளை நாம் எடுக்கவில்லை என்றால் வரும் காலத்தில் மீண்டும் ஒரு பேரிடரை நாம் எதிர்கொள்ள நேரும்” என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பேசிய நாட்டின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், “முன்வு நமது எல்லைகளில் இருந்த போர்க்களங்கள் இப்போது சிவில் சமூகங்களுக்கு வந்துவிட்டது. மக்களின் ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பு உணர்வு, அரசின் எண்ணம் என அனைத்தும் ஒரு நாட்டின் வளர்ச்சி மற்றும் நிலையைத் தீர்மானிக்கிறது.
பேரிடர்கள் மற்றும் தொற்றுநோய்கள் ஆகியவற்றை தனித்தனி பிரச்சினைகளாக இனியும் கருதிப் போராட முடியாது. இந்த கொரோனா வைரஸ் அறிவியல், தரவு மற்றும் பொருளாதார பாதுகாப்பு ஆகியவற்றை தேசியப் பாதுகாப்பின் முக்கிய அம்சங்களாக மாற்றியுள்ளன. வரும் காலத்திற்கு ஏற்றவாறு நாம் தான் தயாராக வேண்டும்” என்றார்.