இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப் படுகிறது. உலகம் முழுதும் உள்ள பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், சாதனைகளுக்காகவும் கௌரவம் அளிக்கும் வகையில் இந்த நாளை சர்வதேச மகளிர் தினம் என்று கொண்டாடி வருகிறார்கள். உலக மகளிர் தினம் என்று கொண்டாடப்படும் இந்நாளில், பாரதத்தின் அனைத்து நாட்களுமே மகளிர் தினம் தான் என்று ஒரு தரப்பு கருத்துகளைப் பகிர்ந்து வருகிறது.
குறிப்பாக, இந்தியாவில், தற்போதைய பிரதமர் மோடியின் அமைச்சரவையில் பெண்கள் சக்தியே நாட்டின் வலிமையைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கி வருகிறது.
தமிழகத்தில் திருச்சியைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன், நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பான பாதுகாப்புத்துறையின் அமைச்சர் பொறுப்பை வகிக்கிறார். தற்போதைய சூழலில் மிகவும் துடிப்பாகவும், முடிவுகள் எடுப்பதில் உறுதியாகவும் திகழும் முதல் தனித்துவ பெண் ராணுவ அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றவர். முன்னர் இந்திரா காந்தி பிரதமர் பொறுப்புடன் இத்துறையை கவனித்தார்.
அடுத்த முக்கியத்துறையான வெளியுறவுத் துறையை திறம்படக் கவனித்துவருகிறார் சுஷ்மா ஸ்வராஜ். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை வித்தியாசமான அணுகுமுறையால் இதுவரை இல்லாத தனிச்சிறப்பிடம் பெற்றுள்ளது. உலக நாடுகள் இந்தியாவை கவனிக்கின்றன. இந்தியாவின் பேச்சைக் காது கொடுத்துக் கேட்கின்றன. உலகில் இந்தியாவுக்கு மிகப் பெரும் மதிப்பு ஏற்படக் காரணமாகத் திகழ்வது வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் துடிப்பும் பணியும்!
பாரதத்தின் மூன்று மகளிர் சக்தியராகத் திகழும் இன்னொருவர் அமைச்சர் ஸ்மிருதி இரானி. மனித வள மேம்பாட்டுத் துறையில் இருந்த போது மேற்கொண்ட அதிரடிகள் பெரும் வரவேற்பைப் பெற்றவை.
இந்த முறை மகளிர் தினதை வித்தியாசமாகக் கொண்டாடுகிறது ஏர் இந்தியா! விமானங்களை முழுக்க முழுக்க பெண்களே இயக்குகின்றனர் என்பதுதான் அந்த செய்தி!
இந்த விமானங்களில், 12 சர்வதேச விமானங்களும், 40க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்களும் அடங்கும். விமானி, துணை விமானி, பணிப்பெண்கள் என அனைத்து பிரிவிலும் பெண்களே பணியில் உள்ளனர். தில்லி – சிட்னி, மும்பை – லண்டன், தில்லி – ரோம், தில்லி-லண்டன், மும்பை-தில்லி-ஷாங்காய், தில்லி-பாரீஸ், மும்பை-நியூயார்க், தில்லி-நியூயார்க், தில்லி-வாஷிங்டன், தில்லி- சிகாகோ இடையேயான வழித்தடங்களில் செல்லும் விமானங்களை இந்தியப் பெண்கள் இயக்குகின்றனர்..
இவற்றின் தொழில்நுட்ப பிரிவில் பெண் பொறியாளர்கள், டெக்னீசியன்கள், உதவியாளர்கள், சேவைப் பிரிவில் மருத்துவர்கள் என பெரும்பாலும் பெண்களே பணியில் உள்ளனர்.