“வேளைபிர தோஷமிது ஈசா”
(மீ.விசுவநாதன்)
மாதாவின் தோற்றத்தில் ஈசா – உன்
மனத்துள்ள ஈரத்தைக் கண்டேன்
கேதாரின் மாமலையில் ஈசா – உன்
கீர்த்திமிகுப் பொற்சுடரைக் கண்டேன்
வாய்மணக்க உன்பேரைச் சொல்ல – என்
வம்சமது வாழுவதைக் கண்டேன்
காய்கனிந்த இன்பமெனும் ஈசா – உன்
கழல்பணிய நோய்தீரக் கண்டேன்
பஞ்சபூத நாயகனே ஈசா – உயிர்ப்
பஞ்சுக்குள் மூச்சாகக் கண்டேன்
கொஞ்சுமொழி பிஞ்செல்லாம் ஈசா – உன்
தோட்டத்துப் பூவாகக் கண்டேன்
காளை,பசு, புட்களெலாம் ஈசா – உன்
கவிதைமொழி பேசுவதைக் கேட்டேன்
வேளைபிர தோஷமிது ஈசா – உன்
பித்தர்கள் ஓதுவதும் கேட்டேன்
மோனத்தில் எப்போதும் ஈசா – நீ
மூழ்கிடுவாய் யோகியரைப் போலே
கானத்துப் பூங்குயிலாய் நானும் – உனைக்
காலமெலாம் பாட்டிசைப்போன் தானே.
(இன்று (31.05.2019) பிரதோஷம்)