சென்னை ரிச்சி தெருவில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீன அதிபர் சென்னை மற்றும் தொடர்ந்து மாமல்லபுரம் செல்லவுள்ள நிலையில், சென்னை ரிச்சி சாலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவத்தை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.
சீன அதிபர் – பிரதமர் மோடி நாளை சென்னை வரவுள்ள நிலையில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று, பெண் ஒருவரை அரிவாளால் வெட்ட முயற்சி செய்துள்ளனர். காசினோ திரையரங்கு அருகே உள்ள சிக்னல் அருகே இரு சக்கர வாகனத்தில் தன் மகனுடன் வந்தார் அந்தப் பெண். அப்போது அவர் மீது அரிவாளால் வெட்டித் தாக்க முயற்சி செய்துள்ளது அந்த கும்பல்.
உடனே அவர் அவர்களிடம் இருந்து தப்பித்து ஒரு ஆட்டோவில் ஏறி, அங்கிருந்து செல்ல முயற்சி செய்திருக்கிறார்.
அப்போது, அந்தப் பெண் மீது நாட்டு வெடிகுண்டு வீசியிருக்கிறார்கள். ஆறு பேர் கொண்ட கும்பல் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளது.
குண்டு வீச்சில் ஆட்டோ சிறிது சேதமடைந்துள்ளது. ரிச்சி தெரு சிக்னல் அருகே இந்தச் சம்பவம் நடந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த பெண் ஒரு வழக்கறிஞர் என்றும், ரவுடி ஒருவரின் மனைவி என்றும் கூறப் படுகிறது. முன்விரோதம் காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகக் கூறப் படுகிறது.
இதை அடுத்து காயம் அடைந்த பெண் உடனடியாக, ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டிருக்கிறார். சம்பவம் நடந்த பகுதி மிகவும் பரபரப்பான பகுதி என்பதால், தற்போதும் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது…
இந்நிலையில், தப்பிச் சென்ற 6 பேரில் இருவர் பிடிபட்டுனர் என்றும், அவர்களின் விவரங்கள் பின்னர் வெளியிடப் படும் என்றும் போலீஸார் கூறியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.