நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
நெல்லை மாவட்டம் அம்பை அருகே சிவந்திபுரத்தில் பலத்த மழை காரணமாக சாலையில் மரம் விழுந்தது. இதனால் அம்பையில் இருந்து சிவந்திபுரம் வழியாக பாபநாசம் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
தென்காசி மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் கன மழை பெய்தது. குற்றாலம் மலைப் பகுதிகளில் பெய்த கன மழையால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துக் காணப் படுகிறது. இருப்பினும், பாதுகாப்பான அளவில் விழுவதால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு போலீஸார் அனுமதி அளித்தனர். இதை அடுத்து, குற்றால அருவிகளில் பயணிகள் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனர்.
இதனிடையே, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்… வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் தலைஞாயிறு 6 செ.மீ., திருத்துறைப்பூண்டியில் 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது… என்று கூறப் பட்டிருந்தது.