தைத் திருநாளாம் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்கு மக்கள் புறப்பட்டுச் சென்று கொண்டிருக்கின்றனர். இதனால் சென்னை மாநகரம் வெறிச்சிடுகின்றனது. பஸ், ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.
பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட, பொது மக்கள் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்ல தொடங்கியுள்ளனர். வரும் 14-ம் தேதி போகி பண்டிகையை தொடர்ந்து பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதற்காக சென்னையிலிருந்து லட்சக் கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள்.
தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களின் வசதியைக் கருதி, தமிழக அரசின் சிறப்பு பேருந்துகள் சேவை தொடங்கியுள்ளது.
இந்த வார இறுதியிலிருந்தே பொங்கல் விடுமுறை தொடங்குவதால், பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை மிக அதிகம். திருச்சி, நாகப்பட்டினம், கடலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கும் அதிக அளவில் பொதுமக்கள் பயணிக்க தொடங்கியுள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்தால் 18004256151 என்ற இலவச எண்ணில் புகார் அளிக்குமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகள் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பேருந்துகளை இயக்குவது குறித்து, போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் அருண் தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து போக்குவரத்துக் கழக நிர்வாகிகள் மற்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு, வடக்கு மண்டல போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் ஜெயகௌரி ஆலோசனைகளை வழங்கினார்.
எந்தெந்த வழித்தடங்களில் போக்குவரத்து செல்ல வேண்டும், சாலை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்து விளக்கினார்.