மஹா சிவராத்திரி சிவாலய ஓட்டம் பக்தர்களுக்கு இளநீர், பழம் வழங்க குமரி இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
சிவாலய பக்தர்களுக்கு வழக்கம்போல் இளநீர், பழம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடமும் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையரிடமும் இந்து முன்னணி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி குமரி மாவட்டச் தலைவர் மிசா சோமன் நம்மிடம் கூறியவை…
வியாழக்கிழமை இன்று ஆட்சியரிடமும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரிடமும் இந்து முன்னணி சார்பில் மனு அளித்துள்ளோம்.
குமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 24) நடைபெறும் மஹா சிவராத்திரி விழாவையொட்டி, பக்தர்கள் பங்கேற்கும் சிவாலய ஓட்டம் வியாழக்கிழமை இரவு (பிப். 20) தொடங்குகிறது.
முன்சிறை திருமலை மஹாதேவர் கோயிலில் இருந்து ஓட்டத்தை தொடங்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் 12 சிவாலயங்களை தரிசித்தபடி 24 மணி நேரத்துக்குள் 110 கி.மீ. தொலைவைக் கடந்து சிவராத்திரி விழாவில் பங்கேற்பர்.
இந்த சிவாலய ஓட்டத்தில் பங்கேற்பதற்காக மாசி ஏகாதசி தினத்தில் மாலை அணிந்து விரதமிருக்கின்றனர். இந்த பக்தர்களுக்கு அரசு சார்பில் டோக்கன் வழங்கப்பட்டு, பொன்மனை சிவன் கோயிலிலும், சிவாலய ஓட்டம் நிறைவுபெறும் திருநட்டாலம் கோயிலிலும் தலா ஒரு இளநீர் மற்றும் பழம் வழங்கும் நடைமுறை இருந்தது.
இந்த உத்தரவு 1939 பிப்ரவரி 14 ஆம் தேதி திருவிதாங்கூர் சமஸ்தான அரசிதழில் வெளியிடப்பட்ட ஒன்று. ஆனால் தற்போது இந்த நடைமுறையை முடக்கி வைத்துள்ளது தமிழக அரசு!
எனவே பக்தர்களுக்கு மீண்டும் இளநீர், பழம் வழங்கவும், குடிநீர், மின்சாரம், சாலை, போக்குவரத்து, பாதுகாப்பு போன்ற வசதிகளை செய்துதரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி நாங்கள் மனு கொடுத்துள்ளோம்.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் பரிசீலனை செய்யும் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.